காலியாகும் 3 மாநிலங்களவை எம்பி பதவி.. பாஜக.. பாமகவுக்கு கொடுக்காதீங்க.. அதிமுகவில் போர்க்கொடி
சென்னை: மாநிலங்களவையில் காலியாகும் 3 எம்பி பதவியால் அதிமுகவில் மோதல் ஏற்பட்டுள்ளது. பாமக ஒரு சீட் கேட்கும் நிலையில், பாஜக மற்றும் ஒபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களும் சீட் கேட்பதால் யாருக்கு கொடுப்பது என்று தெரியாமல் அதிமுக தலைமை அதிர்ச்சியில் உள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தால், எம்பிக்களாக வலம் வந்தவர்கள் இன்று முன்னாள் எம்பிக்களாக முடங்கி கிடக்கிறார்கள். மேலும் தனது தோல்விக்கு இவர் தான் காரணம். அவர் தான் காரணம் முணுமுணுத்தும் வருகிறார்கள். இதனால் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அதிமுக தலைமை மீது அதிருப்தி அதிகரித்துள்ளது.
மதுரை லோக்சபா தேர்தலில் தனது மகன் தோற்றதில் மிகவும் அதிருப்தியில் இருந்த ராஜன் செல்லப்பா நேற்று வெளிப்படையாகவே அதிமுக தலைமையின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மாநிலங்களவை தேர்தல்
இந்நிலையில் தமிழத்திற்கான 6 மாநிலங்களவை எம்பி பதவிகள் வரும் ஜுலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. மாநிலங்களவை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்னும் சில நாட்களில் வெளியிட உள்ளது. இதில் ஒரு எம்பியை தேர்வு செய்ய தமிழகத்தில் 44 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. இதன்படி தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களில் அதிமுக 3 இடத்திலும், திமுக 3 இடத்திலும் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.

கூட்டணி பேரம்
ஏற்கனவே அதிமுகவில் அதிருப்தி நிலவும் நிலையில் மாநிலங்களவை எம்பி பதவிகளை கேட்டு பல தரப்பிலும் இருந்தும் நெருக்கடி வந்துள்ளது. கூட்டணி கட்சியான பாமகவுக்கு லோக்சபா தேர்தலின் போதே சீட் கொடுப்பதாக அதிமுக தலைமை வாக்குறுதி அளித்தது. இந்நிலையில் அன்புமணி தருமபுரியில் தோற்றுப்போனதால் அவருக்கு ஒரு எம்பி சீட் கொடுக்க வேண்டிய நிலையில அதிமுக இருக்கிறது.

பாமகவுக்கு தர எதிர்ப்பு
இது போதாதென்று பாஜகவும் மாநிலங்களவை எம்பி சீட் கேட்டு நெருக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நிர்மலா சீதாராமன் அல்லது ஜெய்சங்கருக்கு ஒரு சீட் கொடுக்க வேண்டும் என கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜகவுக்கு கொடுக்ககூடாது என்பதில் அதிமுக தலைமை உறுதியாக இருப்பதாக தெரிகிறது. இதேபோல் மக்களவை தேர்தலில் பாமகவால் எந்த லாபமும் இல்லாததால் பாமகவுக்கும் சீட் கொடுக்கக்கூடாது என்று எதிர்ப்பு எழுந்துள்ளது.

அதிமுக தலைமை தவிப்பு
இதற்கிடையில் ஓபிஎஸ் ஆதரவாளரான கேபி முனுசாமி, எடப்பாடி ஆதரவாளராக உள்ள தம்பித்துரை, மைத்ரேயன், கோகுல இந்திரா, அன்வர் ராஜா, மனோஜ் பாண்டியன்,தமிழ்மகன் உசேன், பொன்னையன் உள்பட பலரும் மாநிலங்களவை எம்பி சீட் கேட்டு அதிமுக தலைமையை நெருக்கி வருகிறார்கள். ஏற்கனவே பாஜக, பாமகவும் நெருக்கி வரும் நிலையில் 3 எம்பி சீட்டுகளை யாருக்கு தருவது என்று தெரியாமல் அதிமுக தலைமை தவித்து வருகிறது.












Click it and Unblock the Notifications