சென்னையில் திடீரென இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரின் கதி என்ன?
சென்னை: சென்னையில் பெய்த மழையின் காரணமாக புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் ஒரு பகுதி இன்று திடீரென்று இடிந்து விழந்தது. இந்த கட்டட இடிபாடுகளுக்குள் 3 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருவதோடு, மேலும் யாராவது இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனரா? என்பது குறித்து தேடுதல் பணி நடந்து வருகிறது.
சென்னையில் பல இடங்களில் நேற்று கனமழை வெளுத்து வாங்கி உள்ளது. மேலும் இன்று மாலையிலும் சில இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில் தான் இன்று நள்ளிரவு முதல் நாளை வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று பெய்த கனமழையால் சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.சில இடங்களில் இடுப்பளவு வரை தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இப்படி தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் தான் இன்று திடீரென்று சென்னையில் 3 மாடி அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த துயர சம்பவம் சென்னை புரசைவாக்கத்தில் நடந்துள்ளது. புரசைவாக்கத்தில் உள்ள தர்கா தெருவின் அருகே 3 மாடிகள் கொண்ட கட்டடம் உள்ளது. இதன் தரைதளத்தில் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் மேல்தளத்தில் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் இன்று இரவு திடீரென்று கட்டடத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. பெரும் சத்தத்துடன் கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் தீயணைப்பு வீரர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியை அங்கிருந்தவர்கள் தொடங்கினர்.
மொத்தம் 3 பேர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியது தெரியவந்தது. அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதோடு, சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இடிபாடுகளுக்குள் யாராவது சிக்கி உள்ளார்களா? என்பதை தீயணைப்பு வீரர்கள், போலீசார் தேடிவருகின்றனர். இந்த கட்டடம் இடிந்தது எப்படி? என்பதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
இருப்பினும் தொடர்ந்து பெய்த கனமழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த கட்டடம் இடிந்து விழுந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதுபற்றி போலீசார், தீயணைப்பு வீரர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் புரசைவாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications