3,000 புதிய பேருந்துகள்.. 7 தனி சிறப்பு நீதிமன்றங்கள்.. பேரவையில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்!
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரையாற்றினார். அந்த உரையின் போது முக்கிய அறிவிப்புகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க மதுரை, திருச்சி, சேலம், சென்னை, திருநெல்வேலி, கோவை மற்றும் சென்னையின் சுற்றுப்புற சூழல்களில் 7 தனி சிறப்பு நீதிமன்றங்கள் புதிதாக அமைக்கப்படும். இத்தகைய குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க, மாவட்டந்தோறும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்படும்.

பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கைதிகளுக்கு முன் விடுதலை கிடைக்காத வகையில் தமிழ்நாடு சிறைத்துறை விதிகள் திருத்தம் செய்யப்படும். தொடர்ந்து மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை சுற்றியுள்ள கிராமங்கள் விரைவாக வளர்ச்சியடைந்து வருவதால், பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் சாலைகள் விரிவாக்கம் செய்யப்படவுள்ளன.
புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உதயமாகி இருக்கின்றன. இந்த நகரங்களில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் புதிய சாலைகள் அமைக்கவும், பழுதடைந்த சாலைகளை சீர் செய்யவும் ரூ.3,750 கோடி மதிப்பில் பணிகள் செய்யப்படும்.
அடுத்ததாக வரும் ஆண்டில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த 3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு விரைந்து கொண்டு வரப்படும். தொடர்ந்து ஏழை, எளிய பட்டியலின மக்களுக்கு அடுத்த 2 ஆண்டுகளில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தினை சீர் செய்தும், புதிதாக நிலங்களை கையகப்படுத்தியும் ஒரு லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும்.
எங்களுக்கு வாக்களித்த மக்களாக இருந்தாலும், வாக்களிக்காத மக்களாக இருந்தாலும், எங்களின் மனசாட்சியே நீதிபதிகள். எங்கள் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் முழு உழைப்புடன் ஆட்சி செய்து வருகிறோம். அடுத்ததாக திமுக அரசு தான் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications