நட்ட நடு ரோட்டில் தேமுகிக பிரமுகர் கொடூரமாக வெட்டி கொலை.. உறவுக்கார பெண் உள்பட 3 பேர் கைது
சென்னை: சென்னையில் பாடி தேமுதிக பிரமுகர் ஒருவர் பயங்கர ஆயுதங்களால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் உறவுக்கார பெண் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பாடி முல்லை நகரைச் சேர்ந்தவர் பாண்டியன் (45). தேமுதிக பிரமுகரான இவர் பொறியாளர் பிரிவில் பதவியில் உள்ளார். முன்பு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வில்லிவாக்கம் தி நகர் தொகுதியில் இவர் போட்டியிட்டார்.
கட்டட காண்டிராக்டரான பாண்டியன் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த வியாழக்கிழமை காலை அண்ணாநகரில் உள்ள பள்ளியில் படிக்கும் தனது மகனை இரு சக்கர வாகனத்தில் கொண்டு வந்து விட்டு விட்டு வீடு திரும்பினார்.
வழிமறித்த கும்பல்
அப்போது பாடி குமரன்நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அருகில் திடீரென 6 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து வழி மறித்தது. பின்னர் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பயங்கரமாக வெட்டினர். இதனால் ரத்த வெள்ளத்தில் பாண்டியன் சுருண்டு விழுந்து அதே இடத்தில் பலியானவுடன் அவர்கள் தப்பி சென்றனர்.
நீதிமன்றத்தில் சரண்
இந்த கொலை தொடர்பாக உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆர்ச் வினோத் என்பவர் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்திலும், கவுதம், பிரகாஷ், நரசிம்மன் ஆகியோர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.
லதாவிடம் கொடுக்கவில்லை
இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட ஆர்ச் வினோத்தின் தாயார் லதா(54), சிவா என்ற கரண்ட் சிவா(24), ஜெயசீலன்(26) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீஸாரிடம் கூறுகையில் அமைந்தகரையை சேர்ந்தவர் லதா. இவர் பாண்டியனின் உறவினர். இவருக்கு சொந்தமான நிலத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் பாண்டியன் விற்பனை செய்தார். அதில் கிடைத்த 35 லட்சம் பணத்தை லதாவிடம் கொடுக்கவில்லை.
தீர்த்து கட்ட முடிவு
லதாவின் மகன் ஆர்ச் வினோத், தான் புதிதாக கார் வாங்கவேண்டும். அதற்கு முன் பணமாக ரூ.7 லட்சம் கொடுக்கவேண்டும் என்று கேட்டபோதும் பாண்டியன் பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக தெரிகிறது. இதனால் பாண்டியனை தீர்த்துக் கட்ட வேண்டும் என்று லதா, அவருடைய மகன் ஆர்ச் வினோத்திடம் கூறினார். இதன் பேரில் பாண்டியனின் வீட்டருகே கிரிக்கெட் விளையாடுவது போல் இருந்து அவரது நடமாட்டங்களை கண்காணித்து கொலை செய்தது தெரியவந்தது.