மீண்டும் லாக்டவுனா? தமிழ்நாட்டில் கொரோனா கிடுகிடு.. சதமடைந்த சென்னை பாதிப்பு! இன்று பாதிப்பு என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 329 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் பன்மடங்கு அதிகரித்து இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் நேற்று தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் 300 ஐ தாண்டி பதிவாகி உள்ளது
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் உயர்ந்து வருகிறது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் மீண்டும் அச்சமடைந்து இருப்பதுடன் மருத்துவமனைகளிலும் ஏராளமான நோயாளிகள் காய்ச்சல், சளி பிரச்சனைகளுடன் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.
அதிகரிக்கும் கொரோனா: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறையும் அறிவுறுத்தி உள்ளது. அதே நேரம், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை தனிமைப்படுத்தும் வகையில் முந்தைய ஆண்டுகளை போன்று ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்றை விட இன்றும் தினசரி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளது. நேற்று 303 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,346 மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் உயரும் பாதிப்பு: இதனால் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,703 ஆக அதிகரித்து இருக்கிறது. இன்று கொரோனாவால் குணமடைந்து 156 பேர் வீடு திரும்பி இருக்கிறார்கள். உயிரிழப்பு எதுவும் கொரோனாவால் ஏற்படவில்லை. 24 மணி நேரத்தில் உறுதியான கொரோனா பாதிப்பில் 2 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.
அதிகபட்சமாக சென்னையில் 108 பேருக்கும், செங்கல்பட்டில் 32 பேருக்கும், கன்னியாகுமரியில் 27 பேருக்கும், ராணிப்பேட்டையில் 18 பேருக்கும், கோவையில் 17 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, கரூர், நீலகிரி, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications