அடுத்த 34 நிமிடத்தில் பதிவை நீக்கிட்டேனே.. புயலை கிளப்பிய ஆதவ் அர்ஜூனா மனு மீது விரைவில் விசாரணை
சென்னை: சர்ச்சையாக பதிவு போட்டு, அதை நீக்கம் செய்திருந்தார் தவெக ஆதவ் அர்ஜூனா.. இதில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி தவெக தோ்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த மனுவை குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிக்கு அனுப்பி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் நவம்பர் 5-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ அதிர்ச்சி நாட்டையே உலுக்கி எடுத்துவிட்டது.. இந்த சம்பவத்துக்கு பிறகு தவெக தலைவர் விஜய் மட்டுமல்லாமல், அக்கட்சியின் நிர்வாகிகளும் சைலண்டு மோடுக்கு சென்றுவிட்டனர்.

விஜய்யை சுற்றியிருந்த நிர்வாகிகளும் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.. கரூரில் பாதிக்கப்பட்ட தவெக தொண்டர்களை நேரில் சென்று யாருமே சந்திக்கவில்லை.. அவர்களுக்கு ஆறுதலும் சொல்லவில்லை..
சிபிஐ விசாரணை
உயிரிழந்தவர்களுக்கு நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தவில்லை. ஆனால், சிபிஐ விசாரணை மற்றும் முன்ஜாமீன் கோரி கோர்ட்டுக்கு ஓடினார்கள்..
இந்த கரூர் விவகாரத்தில் தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் அமைதி காத்தார். பிறகு திடீரென ஆதவ் அர்ஜுனா தன்னுடைய எக்ஸ் வலைப்பக்கத்தில் ஒரு சர்ச்சை கருத்து பதிவிட்டார்.
நடந்து சென்றாலே தடியடி
அதில், "சாலையில் நடந்து சென்றாலே தடியடி... சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது... இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறிப்போனால், மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சிதான் ஒரே வழி.
இளைஞர்களும், ஜென் Z தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ, அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும், அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!" என்று பதிவிட்டிருந்தார்.
ஆதவ் அர்ஜுனா
கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனாவின் இந்த நள்ளிரவு பதிவு, தவெகவினர் மத்தியில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டது. ஆனால், காலையிலேயே ஆதவ் அர்ஜுனாவின் இந்த பதிவுக்கு கடுமையான கண்டனங்கள் வலுத்தன. இதனால் அதிகாலையிலேயே அந்த பதிவை நீக்கிவிட்டார்.
எனினும், திமுக தரப்பில் கொதித்தெழுந்தனர்.. "அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டிவிடும் வகையில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கருத்துக்களை பதிவிட்டு, பின் அதனை நீக்கி இருக்கிறார். அவரின் கருத்து இந்திய இறையாண்மைக்கு எதிரானது. அவரின் கருத்துக்கு தமிழ்நாட்டு மக்களே எதிர்வினையாற்றி வருகிறார்கள் என்று திமுக எம்பி ஆ.ராசா கூறியிருந்தார்.
பொறுப்பின்மை
தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவின் பதிவு உச்சக்கட்ட பொறுப்பின்மையை காட்டுகிறது" என்று திமுக எம்பி கனிமொழி காட்டமாக கூறியிருந்தார்.
இதற்கு நடுவில், ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற குரல்கள் வெடிக்க துவங்கின.. இதையடுத்து கலவரத்தை தூண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டதால் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனால் ஆதவ் அர்ஜுனா கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விகளும் எழுந்து பரபரப்பை தந்தன. .
34 நிமிடங்களில் நீக்கம்
தன் மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யகோரி ஆதவ் அர்ஜுனா சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், 34 நிமிடங்களில் சமூக வலைதள பதிவுகளை நீக்கி விட்ட நிலையில், அரசியல் உள் நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய எக்ஸ் பதிவு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் பதிவிடப்படவில்லை. காவல்துறை தன் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்ற வழக்கான இந்த மனுவை, சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு மாற்றிய நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 5ம் தேதிக்கு மனுவை பட்டியலிடவும் உத்தரவிட்டனர். அதன்படி, இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் நவம்பர் 5-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications