தமிழ்நாட்டில் கனமழையால் 35 பேர் பலி.. குடிசைக்கு ரூ.5,000, கான்க்ரீட் வீட்டுக்கு ரூ.95,000 நிவாரணம்
சென்னை: தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்த கனமழையால் 35 பேர் உயிரிழந்து உள்ளதாக அறிவித்து உள்ள தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண உதவிகளை அறிவித்து இருக்கிறார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
அதேபோல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய வட மாவட்டங்களிலும், திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து உள்ளது.

அதிகனமழை
அண்மையில் வங்கக்கடலில் வழுவடைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததால் மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் பெருமழை பெய்தது. அதிபட்சமாக சீர்காழியில் 44 செண்டி மீட்டர் பெருமழை கொட்டித் தீர்த்ததால் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளக்காடாக மாறி உள்ளன.

வெள்ள பாதிப்பு
இதனால் சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட இடங்களிலும், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சுற்றுவட்டார கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகின்றன. இதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மழையின் காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மக்கள் மீட்பு
வெள்ளம் காரணமாக பொதுமக்கள் படகுகள் மூலமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். வெள்ளம் தேங்கிய பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் முழு மூச்சாக ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் வெள்ளம் வடிந்தாலும் சில இடங்களில் தேங்கியே உள்ளது.

முதலமைச்சர் ஆய்வு
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் நேற்று நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று கடலூர் மற்றும் சீர்காழி மாவட்டங்களுக்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

35 பேர் பலி
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், "தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக இதுவரை 35 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். கடந்த 2 நாட்களில் 2 பேர் உயிரிழந்து உள்ளார்கள்.

முகாம்களில் 52,751 பேர்
கடலூர், செங்கல்பட்டு, தேனி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 99 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 52,751 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

குடிசை வீடு
வீடுகளுக்குள் மழை, வெள்ள நீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,800 நிவாரண தொகை வழங்கப்படும். மழையால் குடிசை முழுவதுமாக இடிந்து இருந்தால் ரூ.5,000 வழங்கப்படும். குடிசையின் ஒரு பகுதி மழை காரணமாக இடிந்து இருந்தால் ரூ.4,100 நிவாரணத் தொகை வழங்கப்படும்.

கான்கிரீட் வீடு
மழை காரணமாக கான்கிரீட் வீடு இடிந்து இருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.95,000 நிவாரண உதவி வழங்கப்படும். மழை, வெள்ளம் காரணமாக கால்நடைகள் இறந்தால் அதன் உரிமையாளருக்கு ரூ.30,000 நிவாரண தொகை வழங்கப்படும்." என அமைச்சர் அறிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications