ரூ.1000 கோடி வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் பணம் அபேஸ்! சென்னை அறக்கட்டளையிடம் மும்பை நபர் நூதன மோசடி
சென்னை: சென்னை வேளச்சேரியில் தன்வந்தகிரி அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகிகளிடம் ரூ.1000 கோடி நன்கொடை தருவதாக கூறி மும்பையை சேர்ந்தவர் ரூ. 35 லட்சம் மோசடி செய்துள்ளார். அவரை அறிமுகப்படுத்திய சென்னை அண்ணா நகரை சேர்ந்தவரை காரில் கடத்தி கொலை மிரட்டல் விடுத்த அறக்கட்டளை நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா நகரை சேர்ந்த முதியவர் எட்வின் (வயது 60). சம்பவத்தன்று எட்வின் அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், "சென்னை வேளச்சேரியில் செயல்பட்டு வரும் அறக்கட்டளை நிர்வாகிகள் என்னை காரில் கடத்தி சென்று தாக்கினர். எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் வெற்றுப் பத்திரங்களில் என்னிடம் கையெழுத்து வாங்கினர்.

ரூ.1000 கோடி நன்கொடை
என்னை கொன்று விடுவேன் என்று மிரட்டியது மட்டுமல்லாமல் என் குடும்பத்தினர் அணிந்திருக்கும் நகைகளை தரும்படியும், வீட்டு பத்திரத்தை எழுதி தரும்படியும் மிரட்டினர். எனவே அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். இது தொடர்பாக சென்னை அண்ணா நகர் போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது இந்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
அதாவது முதியவர் எட்வின், சென்னை வேளச்சேரியில் உள்ள தன்வந்திரி அறக்கட்டளைக்கு துபாயில் உள்ள நிறுவனம் மூலம் ரூ.1000 கோடி நன்கொடை பெற்று தருவதாக மும்பையை சேர்ந்த சப்தரிஷி பானர்ஜி என்பவர் கூறியாத சொல்லியிருக்கிறார். இதனையடுத்து துபாயில் இருந்த சப்தரிஷி பானர்ஜியை சந்தித்து பேசுவதற்காக அறக்கட்டளை நிர்வாகிகள் துபாய் சென்றிருக்கிறார்கள்.
அப்போது பானர்ஜி, ரூ.35 லட்சம் கமிஷன் தந்தால் தான் மேற்படி ரூ.1000 கோடி நன்கொடை கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். இதனை நம்பிய அறக்கட்டளை நிர்வாகிகள் ரூ.35 லட்சத்தை கொடுத்துள்ளனர். ஆனால் பானர்ஜி கூறியபடி, துபாய் நிறுவனம் ரூ.1000 கோடியை அனுப்பவே இல்லை. பல மாதங்கள் ஆகியும் பணம் வராததால், பானர்ஜியை அறிமுகம் செய்து வைத்த எட்வினிடம் இதுபற்றி கேட்டு இருக்கிறார்கள்.
அறக்கட்டளை நிர்வாகி கைது
அப்போது எட்வினும் முறையான பதில் கூறவில்லை. எனக்கு இது பற்றி தெரியாது என்று சொல்லியிருக்கிறார். இதனால்தான், அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் சேர்ந்து எட்வினை காரில் கடத்தி சென்று பணம் வர வேண்டும் என்று மிரட்டியிருக்கின்றனர். பணம் என்ன ஆனது, எப்போது வரும் என்று கேட்டு இருக்கிறார்கள். கூடிய விரைவில் பணம் வரவில்லை என்றால் உன்னை சும்மா விடமாட்டோம் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும் கூடிய விரைவில் பணம் வரவில்லை என்றால், உன் மனைவி, குடும்பத்தினர் அணிந்திருக்கும் தங்க நகைகளை தர வேண்டும் என்றும், வீட்டு பத்திரத்தை தர வேண்டும் என்றும், வெற்று பத்திரங்களில் அவரை கையெழுத்து போட வைத்தும் மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர்.
இதில் முதற்கட்டமாக முதியவர் எட்வினை கடத்தி சென்று தாக்கிய அறக்கட்டளை நிர்வாகி அமீனுதீன்(40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள மொய்தின், வைஷ்ணவி ஆகியோரை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications