தமிழகம் முழுதும் 35,000 விநாயகர் சிலைகளுக்கு 65000 போலீசார் பாதுகாப்பு.. சென்னையில் கரைப்பது எப்போது
சென்னை: தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், மாநிலம் முழுதும், 35,000 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது. பிள்ளையார் சிலைகள் பாதுகாப்பு பணியில், 65,000 போலீசார் ஈடுபட்டு உள்ளனர். சிலைகள் இருக்கும் இடங்களில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால், கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.. தமிழகத்தில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில், திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில், சென்னை மணக்குள விநாயகர் கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் பக்தர்களின் கூட்டம், விடிகாலையிலேயே அலைமோதியது.

சிறப்பு ஏற்பாடுகள்
பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய, கோயில் நிர்வாகங்கள் தடுப்புகள் அமைத்து, ஒழுங்கு மிக்க ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்திருந்தனர்.. நேற்று மாலையும் சிறப்பு பூஜைகள் கோயில்களில் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு சுண்டல், கொழுக்கட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து, பிள்ளையாரை பூஜித்து விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். வீடுகளில், பக்தர்கள் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து, மாவிலை தோரணங்கள், எருக்கம்பூ மாலைகள், அருகம்புல் உள்ளிட்ட மலர்களால் அலங்கரித்தனர்...
சிறப்பு பூஜைகள்
விநாயகருக்கு பிடித்த மோதகம், கொழுக்கட்டை நைவேத்தியம் படைக்கப்பட்டது. அதேபோல, சுண்டல், அப்பம், பொரி உள்ளிட்ட பாரம்பரிய நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு, விநாயகருக்கு பூஜைகள் செய்யப்பட்டன.
கடந்த சில வருடங்களாகவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், பலர் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட களிமண் விநாயகர் சிலைகளையே பயன்படுத்தினார்கள்..
இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், உயர் நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர்..
கட்டுப்பாடுகள், வழிகாட்டுதல்கள்
அதாவது, விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசுத் துறையிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். தீயணைப்புத்துறை, மின்வாரியம், ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்.
நிறுவப்படும் சிலையின் உயரமானது 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது, பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும், மதவாத வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலோ, பிற மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடுவதற்கும், கோஷமிடுவதற்கும் எவ்விதத்திலும் இடம் தரக்கூடாது போன்ற வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.
இதையடுத்து, சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை, மதுரை, மற்றும் பிற நகரங்களில் ஊர்வல பாதைகளில் காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.. தமிழகம் முழுவதும் சுமார் 35,000 சிலைகளை வைத்து வழிபட போலீசார் அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.
போலீஸ் பாதுகாப்பு
இதில், சென்னையில் மட்டும் 1,500 சிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளுக்கு, 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிலைகள் பாதுகாப்பு பணியில் மட்டுமே 65,000 போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்..
மொத்தத்தில், தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியிலும், சென்னையில் 16,000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து சிலைகளுக்கும் தலா ஒரு போலீசார் வீதம் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில், பட்டினப்பாக்கம் சீனிவாச நகர், பாலவாக்கம் பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் என 4 இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிலைகளுக்கு தினமும் பூஜைகள் செய்யப்பட்டு வரும் 30, 31ம் தேதிகளில் (சனி, ஞாயிறு) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடல் மற்றும் நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது. சிலர் நேற்று முதலே கரைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications