எலியை துரத்தி சென்ற 36 வயது பெண்.. இரும்பு கேட்டில் மோதி பலி.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்
சென்னை: பல்லாவரம் அருகே எலியை அடிக்க துரத்தி சென்ற பெண் வீட்டின் இரும்பு கேட்டில் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர், மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (43). இவரது மனைவி லட்சுமி (36).
செந்தில் சரக்கு வாகன ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு 12 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் வீட்டில் எலிகள் தொல்லை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

லட்சுமி
நேற்று மாலை லட்சுமியின் வீட்டில் ஒரு எலி ஓடுவதை பார்த்தார். உடனே அதை அடிப்பதற்காக வீட்டில் இருந்த கட்டை ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு, எலியை துரத்தினார் லட்சுமி. அவரது மகனும் ஓடி வந்தார். ஆனாலும் எலி வேகமாக ஓடிவிட்டது. ஓடி வந்த வேகத்தில் அங்கிருந்த கிரில் கேட் மீது லட்சுமி மோதினார்.

தலைக்குப்புற சரிந்த பெண்
இதில் காயமடைந்த அவர் அப்படியே சரிந்து தலைக்குப்புற விழுந்தார். அவரது மகன் பதறியடித்துக் கொண்டு போய் பார்த்தார். பின்னர் லட்சுமியை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

போலீஸார் விசாரணை
இது குறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் லட்சுமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஓடி வந்த வேகத்தில் இடித்து கொண்டதால் திடீரென மாரடைப்பு வந்திருக்கலாம் என தெரிகிறது.

உடல் உபாதைகள்
லட்சுமிக்கு ஏதேனும் உடல் உபாதைகள் இருந்ததா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் முதலில் 12 வயது சிறுவன் ஓடி வருகிறான், பின்னாடியே கட்டையை எடுத்து கொண்டு லட்சுமி வருகிறார். அப்போது அங்கிருந்த இரும்பு கேட்டில் இடித்துக் கொள்கிறார். ஒரு நொடியில் அப்படியே சரிந்து தலைக்குப்புற விழுகிறார். உடனே சிறுவன் அம்மா என அழைத்து கொண்டே ஓடி வரும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications