உஷார்! பணத்தை இழக்காதீங்க! கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டிய 4 முக்கிய இடங்கள் இதுதான்
சென்னை: பணம் இன்றி கிரெடிட் கார்டை பயன்படுத்தும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் கிரெடிட் கார்ட்டை 4 முக்கிய இடங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதைய சூழலில் நம்மில் பலரும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகிறோம். கையிலும், வங்கி கணக்கிலும் பணம் இல்லாமல் இருந்தாலும் கூட கிரெடிட் கார்டை பயன்படுத்தி நமக்கு தேவையானவற்றை வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

குறிப்பாக கொரோனா பரவல் காலக்கட்டத்தில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது. தற்போது கொரோனா காலம் முடிந்தாலும் கூட கிரெடிட் கார்டு பயன்பாட்டை பலரும் கைவிடவில்லை. இதற்கு முக்கிய காரணம் அவர்களின் நிதி தேவைகள் தான்.
குறிப்பாக மிடில் கிளாஸ் வகுப்பை சேர்ந்த இளைஞர்கள், குடும்ப தலைவர், தலைவிகள் தங்களின் நிதி பற்றாக்குறையின்போது கிரெடிட் கார்டு பயன்படுத்திவிட்டு அடுத்த மாதம் கிரெடிட் கார்டு பில் கட்டும் வழக்கத்தை கொண்டுள்ளனர். அப்போது சர்வீஸ் சார்ஜ், ப்ராசசிங் பீஸ், வட்டி தொகையுடன் கட்ட வேண்டிய சூழல் உள்ளது.
இதற்கிடையே பல கிரெடிட் கார்டுகள் குறிப்பிட்ட பயன்பாட்டுக்கு சர்வீஸ் சார்ஜ் பிடிக்காமல் சலுகைகளை வழங்கி வருகின்றன. இருப்பினும் பெரும்பாலான கிரெடிட் கார்டுகளை நாம் அன்றாடம் பயன்படுத்தும்போது குறிப்பிட்ட தொகை சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் நம்மிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் 4 முக்கிய இடங்களில் கிரெடிட் கார்டு பயன்பாட்டை நாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது பெட்ரோல், டீசல் நிலையங்கள். பெட்ரோல், டீசல் நிரப்பும் வகையில் பல கிரெடிட் கார்டுகள் சலுகைகள் தருகின்றன. இருப்பினும் பெரும்பாலான கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி நாம் நமது வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பும்போது 1 சதவீதம் வரை கூடுதல் சர்வீஸ் சார்ஜூம் ஜிஎஸ்டியும் பிடிக்கப்படுகிறது. இதனால் நமக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்.
இந்த பட்டியலில் 2வது இடத்தில் இருப்பது ரயில் டிக்கெட் முன்பதிவாகும். இன்றைய சூழலில் மிடில் கிளாஸ் குடும்பத்தினர் பலரும் நீண்டதூர பயணத்துக்கு ரயிலை தேர்ந்தெடுத்து டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். இந்த ரயில் டிக்கெட் முன்பதிவுக்கும் கிரெடிட் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இதில் சில கிரெடிட் கார்டுகளை தவிர்த்து பல கார்டுகளை நாம் பயன்படுத்தி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது டிக்கெட் கட்டணத்துடன் 2 சதவீதம் வரை சர்வீஸ் சார்ஜ் கூடுதலாக செலுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம்.
இந்த பட்டியலில் 3வது இடத்தில் கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுப்பதாகும். அதாவது நமது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி அவசர தேவைக்காக பணம் எடுக்கும்போது ‛ப்ராசசிங்' கட்டணமாக குறிப்பிட்ட தொகை எடுக்கப்படுகிறது. இதனை முடிந்தவரை கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுப்பதை நாம் கைவிட வேண்டும்.
இதில் 4வது இடத்தில் இன்சூரன்ஸ் உள்ளது. அதாவது நாம் நமக்கும், நமது குடும்ப உறுப்பினர்களுக்கும் இன்சூரன்ஸ் (காப்பீடு) செய்திருப்போம். இத்தகைய காப்பீட்டு திட்டத்துக்கான தவணை தொகையை முடிந்தவரை நாம் பணமாக செலுத்துவதை வாடிக்கையாக்கி கொள்ள வேண்டும். மாறாக காப்பீட்டு தொகையை கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும்போது கூடுதலாக சர்வீஸ் சார்ஜ் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.
இதனால் மேற்கூறிய இந்த 4 இடங்களில் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு முன்பு யோசித்து செயல்படுவது நல்லது. இந்த 4 விஷயங்களுக்கும் உங்களின் கிரெடிட் கார்டுகளுக்கு ஏதேனும் சலுகைகள் இருந்தால் பரவாயில்லை. மாறாக சலுகைகள் இல்லாதபட்சத்தில் மேற்கூறிய விஷயங்களுக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.












Click it and Unblock the Notifications