NIA விசாரணைக்கு ஆஜரான சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 4 நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.. கைதாக வாய்ப்பு?
சென்னை: நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் அண்மையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ரெய்டு நடத்திய நிலையில், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் முன்பாக விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.
2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது. வெளிநாடுகளில் இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சித்து வருகின்றனர் என்பது என்.ஐ.ஏ.குற்றச்சாட்டு.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளிள் ஈடுபட்டதாக இலங்கை தமிழர்கள், தமிழ்நாட்டு தமிழர்கள் சிலர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நபர்களுடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு தொடர்பிருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிப்ரவரி 2-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக், இசை மதிவாணன், விஷ்ணு, முருகன் உள்ளிட்ட பலரது வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனைகளில் செல்போன்கள், லேப்டாப்கள், புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சந்தேகப் பட்டியலில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை விசாரணைக்கு ஆஜராக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். இதனடிப்படையில் நாம் தமிழர் நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் இன்று என்.ஐ.ஏ. விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.
இந்த விசாரணை தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேச விரோத செயல்களில் நாம் தமிழர் கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். இவர்களை நீண்டகாலம் கண்காணித்தே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அடுத்ததாக கைது நடவடிக்கைகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கொள்வர் என கூறியிருந்தார். இதனால் இன்றைய விசாரணைக்கு ஆஜராகும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்படக் கூடிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன், இசை மதிவாணன், விஷ்ணு, முருகன் ஆகியோர் வழக்கறிஞருடன் ஆஜராகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications