கால்வாய் விரிவாக்கம்.. சைதாப்பேட்டை காவாங்கரையிலிருந்து மக்கள் இடமாற்றம்.. என்ன நடந்தது?
சென்னை: சைதாப்பேட்டை காவாங்கரை கால்வாய் விரிவாக்க பணிக்காக அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களில் சிலர் தெருக்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் பலருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் மீதம் உள்ளோருக்கு வீடுகள் வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் இறுதியில் இவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட மாட்டாது என்று அதிகாரிகள் திட்டவட்டடமாக கூறியுள்ளனர். இதன் காரணமாக சுமார் 40 குடும்பங்கள் தெருக்களில் தங்கியுள்ளனர்.
சினேகனால் செதுக்கப்பட்ட வரிகள்.. கண்டுகொள்ளாத தேசிய விருது.. ரசிகர்களின் கருத்துக்கள்
ஆக்கிரமிப்பு
கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக சென்னையின் பல முக்கிய பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்தது. குறிப்பாக வடபழநி, திருநகர் உள்ளிட்ட இடங்களில் நீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இது குறித்து பொதுநல வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில் காவாங்கரை மற்றும் அதன் கிளை கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புதான் இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது.
உத்தரவு
இதனையடுத்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உத்தரவின் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நீர் வழிப்பாதைகள் சீரமைக்கப்பட்டு வந்தன. கடந்த திங்கட்கிழமை சைதாப்பேட்டை காவாங்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். முன்னேற்பாடாக அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கான வீடுகள் கட்டப்பட்டு அவை மக்களிடம் ஒப்படைக்கப்பட்டதால் பெரும் சர்ச்சையின்றி இந்த ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நடந்து முடிந்தது.
40 குடும்பங்கள்
ஆனால் வீடு வழங்கும் பட்டியலில் சிலரின் பெயர்கள் விடுபட்டு போய் இருந்தன. இதனையடுத்து அவர்கள் அருகில் உள்ள சமுதாய நலக்கூடங்களில் தங்கவைக்கப்பட்டனர். ஆனால் இன்று அங்கிருந்தும் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது "உங்களுக்கு வீடு கிடையாது" என்று கூறிவிட்டதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக 40 குடும்பங்கள் தற்போது சாலையில் வசித்து வருகின்றனர்.
பரிசீலனை
சாலையிலே குளித்து, சமைத்து, உண்டு, உறங்கி வருகின்றனர். இதில் கைக்குழந்தைகளுடனும் சிலர் இருக்கின்றனர். மேலும் தங்களில் ரேஷன் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகள் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதில் கடந்த 2000க்கு பிறகு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு புதியதாக ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லையென்றும் அவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் தரப்பில், "கடந்த 2017ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இன்றியும் வீடு வழங்கப்படாமல் இருந்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.