கேரளா டூர் போன சென்னை பேங்க் மேனேஜர்.. வீட்டில் அவ்வளவும் தங்கம்.. கேமராவை பார்த்து அரண்ட மனைவி
சென்னை: சென்னை ஆவடி அருகே தனியார் வங்கி மேலாளர் கேரளாவுக்கு சுற்றுலா சென்ற நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றார்கள்.
சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை செயின்ட் பிரான்சிஸ் நகரைச் சேர்ந்த 53 வயதாகும் பரசுராமன், சென்னை தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருகிறார். அவரது மனைவி பரிமளா (49). அவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த 5-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு பரசுராமன் குடும்பத்துடன் கேரளாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12.45 மணிக்கு இவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை தனது செல்போன் மூலம் அவரது மனைவி ஆய்வு செய்திருக்கிறார். மர்ம நபர்கள் 2 பேர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழையும் காட்சிகளைக் கண்டு பரிமளா அதிர்ந்தார். இதுகுறித்து உடனடியாக வங்கி மேலாளரான தனது கணவரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து உடனடியாக பரசுராமன் தனது உறவினரான ஆவடி கோயில்பதாகை பூம்பொழில் நகரில் வசிக்கும் சாலமன் (40) என்பவருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று சாலமன் பார்த்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள் கொள்ளையர்களின் தடயங்களை பதிவு செய்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பீரோவில் இருந்த சுமார் 50 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் சுற்றுலா சென்றுள்ள பரசுராமன் குடும்பத்துடன் வீட்டிற்கு வந்து பார்த்த பிறகு தான் உண்மையில் எவ்வளவு நகை பணம் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறித்த விவரம் தெரிய வரும் என்று போலீசார் கூறினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications