தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடக்கம்- 187 நாடுகளின் வீரர்கள் பங்கேற்பு
சென்னை: தமிழ்நாட்டில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று மாலை தொடங்குகின்றன. பிரதமர் நரேந்திர மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைக்கிறார். இப்போட்டிகளில் மொத்தம் 187 நாடுகளின் 1400 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா காலங்களில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்பட்டன.

தற்போது சர்வதேச அளவில் கவுரவமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுகிறது. ஆசிய நாடு ஒன்றில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போட்டி நடத்தப்படுகிறது. இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டிய நடத்தும் பெருமையை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை இன்று மாலை தொடங்கி வைக்கிறார். இப்போட்டிகளில் மொத்தம் 187 நாடுகளின் 1,400 வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்கள் அனைவரும் 30க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் செஸ் போட்டிகளில் வென்ற கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில்தான் மொத்தம் 28 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர். பிற மாநிலங்களில் ஒற்றை இலக்கத்தில்தான் கிராண்ட் மாஸ்ட்ர்கள் இருக்கின்றனர். அதனால் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தும் பெருமையை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு ரூ92 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இப்போட்டிகளை நடத்தும் ஏற்பாடுகளை மேற்கொள்ள மொத்தம் 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். 4 மாதங்களில் மட்டுமே அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாக செய்து முடித்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் சின்னமான தம்பி உருவாக்கப்பட்டு இந்தியா முழுவதும் சென்றடையும் வகையில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான விளம்பரங்கள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டன. திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த விளம்பரங்கள் உருவாக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications