பேயாட்டம் ஆடி விட்டு கரையை கடந்த கஜா.. பலி எண்ணிக்கை 49-ஆக உயர்வு!
Recommended Video
சென்னை: கஜா புயல் தமிழகத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்திவிட்ட நிலையில் இந்த புயலுக்கு இதுவரை 49 பேர் பலியாகிவிட்டனர்.
கடந்த 11-ஆம் தேதி வங்க கடலில் கஜா புயல் உருவானது. இந்த புயல் நேற்று முன் இரவு 12 மணிக்கு நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என கூறப்பட்டது.
இதனால் நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேற்கண்ட இடங்களில் நேற்று முன் தினம் மாலை முதலே மழை பெய்ய தொடங்கியது.
புதுக்கோட்டை: முறிந்த 30 ஆயிரம் மரங்கள்.. மின்சாரம் கிடைக்க ஒருவாரம் ஆகும்! இருளில் தவிக்கும் நாகை!
சூறாவளி காற்று
கஜாவின் கண் பகுதி 26 கி.மீ. நீளமும், 20 கி.மீ. அகலமும் கொண்டது. இது கரையை கடக்க 2 மணி நேரம் ஆனது. அப்போது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
காற்று வீசியது
இதனால் சாலையில் வெள்ளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. புயல் கரையை கடந்த போது அதிராம்பட்டினத்தில் 110 கிலோ மீட்டர், நாகையில் 100, காரைக்காலில் 74 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது.
வீடுகளின் கூரைகள்
திருச்சி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் நாசமாயின. கடைகளில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள், சாலைகளில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள் தூக்கி வீசப்பட்டன. சாலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் தூக்கி வீசப்பட்டன. பல இடங்களில் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன.
அதிகப்பட்சமாக 18 பேர்
கஜா புயலால் தமிழகத்தில் இதுவரை 49 பேர் பலியாகிவிட்டனர். தஞ்சையில் அதிகப்பட்சமாக 18 பேர் பலியாகியுள்ளனர். புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் தலா 7 பேரும், கடலூர் மாவட்டத்தில் 3 பேரும், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் தலா 2 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்து இருக்கிறார்கள்.
விமானம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் காயம் அடைந்தனர். திருச்சிக்கு நேற்று காலை வந்த 2 விமானங்கள் பலத்த மழை காரணமாக தரை இறங்க முடியாததால் சென்னை மற்றும் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டன.
காயமடைந்தவர்கள்
இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்று பார்வையிட உள்ளார். அதற்கு முன்னதாக கஜா புயலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு நிதியுதவி அறிவித்துள்ளது. மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ .1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.