கரூர் இனி கலக்கப் போகுது.. பெரிய இடமாகப் போகுது பெரம்பலூர்! மாஸா வருது கோத்தாரி.. சூப்பர் திட்டம்.!
சென்னை: ரூ.5,000 கோடி முதலீட்டில் 50,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட், கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், தோல் அல்லாத காலணி உற்பத்தி திட்டங்கள் நிறுவுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு அரசு சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழில் வளத்தை மேம்படுத்தவும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தவும் பல்வேறு நிறுவனங்கள் மூலம் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் உலக முதலீட்டாளர் மாநாடு, முதல்வரின் அமெரிக்க பயணம் மூலம் பல்வேறு வெளிநாடுகளின் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிற்சாலைகளை அமைத்து வருகின்றன. ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற முனைப்புடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
மேலும், ஏற்கனவே தமிழகத்தில் ஆலை அமைத்து வரும் நிறுவனங்களும், விரிவாக்கம், மற்றும் புதிய ஆலைகளை நிறுவி வருகின்றன. அந்த வகையில் கரூர் மாவட்டம் பெரம்பலூர் மாவட்டங்களில் ஐம்பதாயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 5000 கோடி முதலீட்டில் பல்வேறு தொழிற்சாலைகள் நிறுவப்பட உள்ளது
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்," தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (26.2.2025) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஃபீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனம், கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், 5000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 50,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தோல் அல்லாத காலணி உற்பத்தி திட்டத்தை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் மற்றும் எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
பெரும் அளவில் முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு. குறிப்பாக பெண்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும், மாநிலத்தில் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திடவும், தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.
அதன்படி, ஃபீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனம், 5000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 50,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தோல் அல்லாத காலணி உற்பத்தி திட்டத்தை நிறுவுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதன் மூலம், தொழில்துறையில் பின்தங்கிய மாவட்டங்களான கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இத்தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதால், இம்மாவட்டங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு. குறிப்பாக பெண்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் உருவாகும். இதனால் இப்பகுதி மக்களின் தனிநபர் வருமானம் அதிகரிப்பதுடன். பொருளாதாரமும் மேம்படும்.
இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், எவர்வான் ஷுடவுன் குழுமத்தின் தலைவர் ரான், கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications