அருப்புக்கோட்டையில் லேப்! சென்னை மாதவரத்தில் ரூ 16 கோடி மெத்தபெட்டமைன் பறிமுதலானதன் பின்னணி
சென்னை: சென்னை மாதவரத்தில் 16 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மதிப்பு 16 கோடி ரூபாயாகும்.
தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அவ்வப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மிகவும் ஆபத்தான, வீரியமிக்க மெத்தபெட்டமைன் எனும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

அந்த வகையில் கடந்த வாரம் மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக சென்னைக்கு கடத்திய ரூ 1.5 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக், வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாதவரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ 16 கோடி மதிப்பிலான 16 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஷாகுல் ஹமீது, லாரன்ஸ், சரத்குமார், ஜான்சி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மெத்தபெட்டமைன் போதை பொருளை விற்பனை செய்ததாகவும் தெரியவந்தது.
தமிழகத்தில் அதிகபட்சமாக மெத்தபெட்டமைன் போதை பொருள் மாதவரத்தில்தான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 17.8 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டெல்லி, ஹரியானா, மணிப்பூரில் முகாமிட்டு இதுவரை 10 பேரை மாதவரம் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை மாதவரத்தில் கைப்பற்றப்பட்ட மெத்தபெட்டமைன் அருப்புக்கோட்டையில் ஒரு ஆய்வகத்தில் வைத்து தயாரிக்கப்பட்டதாம். மணிப்பூரில் இருந்த இந்த போதை பொருளை தயாரிப்பதற்கான மூல பொருட்கள் வாங்கியதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications