50 அரசுப் பள்ளி மாணவர்கள் ரஷ்யா பயணம்!.. தூள் கிளப்பும் திராவிட மாடல்!
சென்னை: அடிதூள்! வரும் 9 ஆம் தேதி 50 அரசுப் பள்ளி மாணவர்கள் ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்குப் பார்வையிடுவதற்காகப் பயணம் செய்ய இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் இதற்காகவே தனியாக நடைபெற்ற தேர்வுகளில் வென்றதால், இந்தப் பயணத்திற்கு மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.
இந்தப் பட்டியலில் தாம்பரம் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களும் இடம்பிடித்துள்ளனர்.

கொரோனா காலகட்டத்தில் பள்ளிக்கல்வித் துறைதான் அதிகம் நெருக்கடிக்கு ஆளானது. மாணவ, மாணவியர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியதால் அவர்களது கல்வி பெரிய அளவில் பாதிப்புக்குள்ளானது. அந்த நேரத்தில்தான் ராக்கெட் சயின்ஸ் என்ற ஆன்லைன் வகுப்புகள் கடந்த ஜனவரி முதல் அறிமுகப்படுத்தப்பட்டன.
அகத்தியர் விண்வெளி அறிவியல் குழுமம் சார்பில் வார இறுதி நாட்களில் பள்ளி பிள்ளைகளுக்கு இந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுவந்தன. மொத்தம் 56 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 500 மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

அப்படிப் பங்கேற்ற மாணவர்களுக்கு பல்வேறுகட்ட தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில் இறுதியாகத் தேர்வான காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை எனப் பல பள்ளிகளைச் சேர்ந்த 75 மாணவர்கள் ரஷ்யாவில் உள்ள யூரி ககாரின் விண்வெளி மையத்தைப் பார்வையிடத் தேர்வாகியுள்ளனர்.
இந்த மாணவர்களில் செங்கல்பட்டு மாவட்டம் ஜமீன் பல்லாவரத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படித்த ரோஹித், முகம்மது சாதிக், ரஷித், லத்தஷா, இலக்கியா, லித்திகா ஆகிய 6 மாணவர்களும் தேர்வாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் வரும் 9 தேதி ரஷ்யா புறப்பட உள்ளனர்.
இது குறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், அவரது ட்விட்டர் பக்கத்தில், "சிறப்பாக செயலாற்றிய ஆசிரியர்களை கெளரவிக்கும் நோக்கில் சென்னை ரஷ்யன் கலாசார மையத்தில்
@Ramrajofficial சார்பாக ஆசிரிய பெருமக்களுக்கு 'இந்து தமிழ் திசை - #அன்பாசிரியர் 2022' விருதுகளையும்,அகத்தியர் விண்வெளி அறிவியல் குழுமம் சார்பாக இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை அவர்களால் பயிற்சி கொடுக்கப்பட்டு ரஷ்ய விண்வெளி ஏவுதளம் செல்லவுள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டுகள் தெரிவித்தோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

"நாங்கள் வரும் 9 ஆம் தேதி சென்னையிலிருந்து ரஷ்யா கிளம்புகிறோம். அங்கு மாஸ்கோவில் உள்ள Yuri gagarin space center ஐ பார்வையிட உள்ளோம். மேலும் ரஷிய விண்வெளி மையத்தையும் பார்க்க உள்ளோம்.
இதுவரை நாங்கள் படித்த ஏவுகணை கல்வி அறிவைக் கொண்டு வெளிநாட்டில் உள்ள ஒரு ஏவுகணை அறிவியல் மையத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து அதன் மூலமாக அறிவை வளர்த்துக்கொள்ள இருக்கிறோம்.

மேலும் அது சார்ந்த உயர்கல்வியைத் தேர்ந்தெடுத்துப் படிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் எங்களின் ஆராய்ச்சி அறிவு இன்னும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்" என்கிறார் மாணவர் ரோஷித்
இந்தப் பயணத்திற்குத் தேர்வாகி இருந்தும், வெளிநாடு செல்ல இலக்கியா மற்றும் லித்திகா ஆகிய இருவருக்கும் நிதி உதவிக்குக் கிடைக்காமலிருந்தது. அதை அறிந்த தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, தனது சொந்த நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாயை மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவின் போது காசோலையாக வழங்கினார்.
மேற்கொண்டு மாணவர்களின் பயணத்திற்காக நன்கொடையாளர்களிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் நிதியை நன்கொடையாகத் திரட்டிக் கொடுத்தார்.

ரஷ்யாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தைப் பார்வையிடத் தமிழ்நாட்டிலிருந்து மொத்தம் 75 மாணவர்கள் இதுவரைத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் நிதி உதவிக்கிடைத்த 50 மாணவர்கள் முதற்கட்டமாக வரும் 9 ஆம் தேதி ரஷ்யா பயணிக்க உள்ளனர். மற்ற மாணவர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு மே மாதம் அழைத்துச் செல்ல இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"என் மகன் முகம்மது 11 ஆம் வகுப்பு படிக்கிறான். இதுவரை நான் ராக்கெட் என்பதை வானத்தில் அண்ணாந்துதான் பார்த்து இருக்கிறேன். ஆனால், எங்களது பிள்ளைகளால் இந்த ராக்கெட் சயின்ஸ் வகுப்புகளில் நாங்களும் பங்கேற்றோம்.
அந்த வகுப்புகளில் பங்கேற்கும்போதுதான் உணர்ந்தேன், நாம் இப்படி எல்லாம் படிக்காமல் விட்டுவிட்டோமே என்று. இதற்கு எல்லாம் ஒரே காரணம், விஜயலக்ஷ்மி ஆசிரியைதான். அவருக்குத்தான் நாங்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
அதைப்போலவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதிக்கும் மிகப் பெரிய நன்றி. சட்டமன்ற உறுப்பினர்தான் கடைசிக் கட்டத்தில் நிதி உதவி செய்து மாணவர்கள் ரஷ்யா செல்ல உதவினார். அவரை மறக்கவே முடியாது" என்கிறார் முகம்மதுவின் தாயார்
"பலருக்கும் மிகக் கடினமாக இருக்கக் கூடிய இந்த ராக்கெட் அறிவியல் என்ற பயிற்சியை நம் அரசுப் பள்ளி மாணவர்களும் கற்றுத் தரலாமே என்றுதான் இந்த வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டன.

அதில் ஒரு கட்டத்திற்கு மேல் தமிழ்நாடு முழுவதும் உள்ள 500 மாணவர்கள் இணைந்தார்கள். அதில் எங்கள் பள்ளி சார்பாக 13 பேர் இணைந்தார்கள். இப்போது இறுதியாக 6 பேர் தேர்வாகி உள்ளனர்" என்கிறார் ஜமீன் பல்லாவரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியை விஜயலக்ஷ்மி.
சென்னை மாணவர்களைப் போலவே பட்டுக்கோட்டை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் எஸ். கலைமகள் என்ற மாணவியும் வரும் 9 ஆம் தேதி ரஷ்யா செல்கிறார். அது குறித்து கலைமகள், "நான் கட்டுமாவடி என்ற ஒரு குக்கிராமத்திலிருந்து வருகிறேன். அங்கிருந்து பட்டுக்கோட்டைக்கு வந்து படித்துச் செல்கிறேன். இதே பள்ளியில் நான் 10 ஆம் வகுப்பு படிக்கும்போது இந்த வாய்ப்புக் கிடைத்தது.
எங்களது அறிவியல் ஆசிரியர் மூலமாக எனக்கு இந்த "ராக்கெட் சயின்ஸ்" என்ற ஆன்லைன் கிளாஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைக் கடந்த ஜனவரி 2022இல் தொடங்கினார்கள். அதிலிருந்து 400 நாள்கள் வரை இந்த வகுப்பில் பங்கேற்றோம். அதில் நான் நான்காவது மட்டத்தை எட்டி இருக்கிறேன். அதைக் கொண்டுதான் இப்போது ரஷ்யா செல்ல தேர்வாகி இருக்கிறேன்.
எங்கள் பள்ளியில் முதலில் 20 மாணவிகள் இதில் பங்கேற்றோம். அதில் 4வது மட்டத்திற்கு மொத்தம் 8 பேர் வந்தோம். அந்த 8 பேரும் ரஷ்யா செல்ல தேர்வாகி இருக்கிறோம். அதிலும் முதற்கட்டத்தில் 3 பேர் இப்போது ரஷ்யா செல்கிறோம். 2வது கட்டமாக மீதம் உள்ள 5 பேர் செல்ல உள்ளனர்.
இதை எல்லாம் பார்க்கும்போது உற்சாகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எப்போது ரஷ்யா சென்று அந்த விண்வெளி மையத்தைப் பார்ப்போம் என்று ஆர்வமாக இருக்கிறது" என்கிறார்
எனக்கு விண்வெளி ஆராய்ச்சியாளராக ஆக வேண்டும் என்பதுதான் கனவு. ஆனால், அந்தளவுக்குப் படிக்கவைக்க வீட்டில் உள்ளவர்களுக்கு வசதி இல்லை. வறுமையான குடும்பம்தான். இந்த ஆன்லைன் வகுப்பில் படித்ததால், நிறையச் சான்றிதழ்களை நான் இப்போதே பெற்றுள்ளேன்.
வருங்காலத்தில் அந்தத் துறைசார்ந்த படிப்பைத் தேர்வு செய்ய நிச்சயம் இந்தச் சான்றிதழ்கள் கட்டாயம் உதவும்" என்ற கலைமகள் இறுதியாக ஒரு வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். அதைக் கேட்கும்போது மனம் ஏதோ செய்தது.
"தினமும் பள்ளி விட்டால் வீடு, வீடு விட்டால் பள்ளி. இதுதான் வாழ்க்கை. இந்த வகுப்புகள் ஆரம்பித்த பிற்பாடுதான் ஸ்ரீஹரி கோட்டா, பெங்களூரு என சில பகுதிகளுக்குச் சென்றோம். அந்த வாய்ப்பு, இந்த வகுப்பால் வந்தது. இப்போது ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கே போகிறோம். அதுவே பெரிய சந்தோஷம்தான்" என்கிறார்.
கலைமகளின் தந்தை ஒரு மீனவர். அம்மா ஒரு தனியார் பள்ளியில் பகுதிநேர ஆசிரியையாகப் பணி செய்து வருகிறார்.
மீனவர் வீட்டுப் பிள்ளை, விண்மீனைப் பற்றி ஆராய்ச்சி செய்யப் போகிறார்.












Click it and Unblock the Notifications