ஓபிசி இட ஒதுக்கீடு... மூன்று நபர் கமிட்டி அமைக்க ஹைகோர்ட் உத்தரவு!!
சென்னை: ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும். தற்போது இருக்கும் சூழலின் அடிப்படையில் மத்திய அரசு முடிவை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் நடைபெற்று கொண்டுள்ளது. மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், எம்.சி.ஐ-யும் தீர்மானிக்க வேண்டும் என்றும் இன்று மத்திய அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இன்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி , நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, வழங்கிய தீர்ப்பில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் நடைபெற்று கொண்டுள்ளது. மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், எம்.சி.ஐ-யும் தீர்மானிக்க வேண்டும். இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சில் வாதம் ஏற்க முடியாது. மருத்துவ கவுன்சில் விதிகளில் மாநில இடஒதுக்கீடு பின்பற்ற கூடாது என எந்த விதிகளும் இல்லை.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு விரைந்து சட்டம் இயற்ற வேண்டும். மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஒபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரிதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் இல்லை. மத்திய - மாநில அரசுகளின் சுகாதார துறை அதிகாரிகள் இந்திய மருத்துவ கவுன்சில் கலந்தாலோசித்து இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும். மூன்று நபர் கமிட்டி அமைத்து, மூன்று மாதங்களில் விசாரித்து மத்திய அரசு அறிவிக்க வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர்.
சாத்தான்குளம் ஜெயராஜ் மகளுக்கு அரசுப் பணி - வேதனையில் இருந்து மீள வேலை கொடுத்த அரசு
ஓபிசிக்கு இல்லை
ஓபிசி. எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு நீண்ட காலமாக அகில இந்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் இருந்தது. இதை எதிர்த்து 2006 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அபயநாத் என்பவர் வழக்கு தொடுத்தார். இதையடுத்து, எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. ஆனால், மருத்துவத்தில் ஓபிசி மாணவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து தமிழகத்தில் இருக்கும் திமுக உள்பட எதிர்க்கட்சிகள் 1996ல் வழங்கப்பட்ட ஒதுக்கீட்டு சட்டத்தின்படி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
ஓபிசிக்கு மத்திய அரசு எதிர்ப்பு
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து திமுக உள்பட தமிழக எதிர்க்கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு சார்பில் வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பிற்படுத்தபட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை. அப்படி வழங்கினாலும் உச்ச நீதிமன்றம்தான் அதற்கான தீர்ப்பை வழங்க முடியும். ஏற்கனவே இட ஒதுக்கீடு தொடர்பான ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
வேறு வேறு வழக்கு
இதற்கிடையே, உச்ச நீதிமன்றதில் டி.கே.பாபு என்பவர் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் வழக்கறிஞரும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் வாதிட்டார். அப்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கிற்கும், சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கலாம் என்று உத்தரவிட்டது.
தேசிய அளவில் சர்ச்சை
இதையும் மீறி மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது வாதத்தை வைத்துள்ளது. இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குகிறது. மத்திய அரசு தொடர்ந்து ஓபிசி வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை மறுத்து வருவது தேசிய அளவிலான சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இளங்கலையில் எவ்வளவு
அகில இந்திய மருத்துவப் படிப்புக்கு இளங்கலை படிப்பில் 15 சதவீத இட ஒதுக்கீடும், மருத்துவ முதுகலை படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடும் மாநில அரசால் ஒதுக்கப்பட்டு வருகிறது. இதன்படி முதுகலைப் படிப்பில் 945 இடங்களும், இளங்கலை மருத்துவப் படிப்பில் 400க்கும் மேற்பட்ட இடங்கள் தமிழகத்தில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஓபிசிக்கு எவ்வளவு
பிற்படுத்தபட்ட மாணவர்களுக்கு மத்திய அரசின் விதிப்படி 27 சதவீத இடங்களை வழங்கலாம். அப்படி வழங்குவதால் மொத்த இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேலே போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மத்திய அரசு தற்போது மத்திய கல்வி நிறுவனங்களில் எஸ்.சி. - 15, எஸ்.டி.-7.5, ஓ.பி.சி. - 27, இ.டபிள்யூ.சி. - 10 ஆக மொத்தம் 59.5 சதவீத இட ஒதுக்கீட்டினை அமலாக்கி வருகிறது.
இதே நியாயம் அகில இந்திய தொகுப்பில் உள்ள மாநிலங்கள் அளிக்கும் இடங்களில் ஓ.பி.சி.க்கு இட ஒதுக்கீடு வழங்கும் போது மத்திய அரசு ஏற்க மறுப்பது ஏன்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி இருந்தன.
மாநில உரிமை பறிப்பா
2006-ம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியுள்ள இட ஒதுக்கீடு சட்டம் என்பது, மத்திய அரசின் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். மத்திய அரசு நிறுவனங்களுக்கான இந்த சட்டத்தை மாநிலங்களிலிருந்து கொடுக்கப்படும் அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கும் விஸ்தரிக்க முயற்சி செய்வது மாநிலங்களின் உரிமையைத் தட்டிப் பறிப்பதாகும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன.
மாநில உரிமை பறிப்பா
2006-ம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியுள்ள இட ஒதுக்கீடு சட்டம் என்பது, மத்திய அரசின் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். மத்திய அரசு நிறுவனங்களுக்கான இந்த சட்டத்தை மாநிலங்களிலிருந்து கொடுக்கப்படும் அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கும் விஸ்தரிக்க முயற்சி செய்வது மாநிலங்களின் உரிமையைத் தட்டிப் பறிப்பதாகும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன.