6 மணி ஆச்சு.. ஓட்டு போட வாக்குச்சாவடியில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன்.. கேட்டை மூடிய அலுவலர்கள்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு செல்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக, இன்று காலை 6 மணிக்கே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) சரியாகச் செயல்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த 50-க்கும் மேற்பட்ட சோதனை வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அதைத்தொடர்ந்து, மாதிரி வாக்குகள் அழிக்கப்பட்டு 7 மணி முதல் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தல் அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரடியாகக் கண்காணிக்கப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு வரலாறு காணாத அளவில் நடைபெற்றுள்ளது. மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 2021 தேர்தலில் 3 மணிக்கு 53.35 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்படி 2026 தேர்தலில் கூடுதலாக 3 மணியளவில், 16.65 சதவிகித வாக்குகள் பதிவாகின.
5 மணி நிலவரப்படி பல மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு 80 சதவீதத்தைக் கடந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சராசரியாக 82.24 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து உள்ளனர்.
இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. அதேநேரம் 6 மணிக்குள் வரிசையில் நின்ற வாக்காளர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர். 6 மணிக்கு மேல் வருபவர்களுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்படவில்லை.
6 மணியளவில், வாக்குச்சாவடிகளின் பிரதான வாயில் மூடப்பட்டது. அதற்கு மேல் யாரும் புதிதாக அனுமதிக்கப்படவில்லை. 6 மணிக்குள் வரிசையில் வந்து நின்றவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர். வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும். வரும் மே 4, 2026 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.













Click it and Unblock the Notifications