சென்னையில் ரிப்பேரான பிரிட்ஜில் மூட்டைகள்! பிரித்தால் பூஞ்சை பிடித்த ஆட்டுக்கால்கள்! 600 kg அழிப்பு
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் 600 கிலோ கெட்டு போன ஆட்டுக் கால்கள், இறைச்சிகளை சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றை அப்புறப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சைதாப்பேட்டையில் உள்ள அல்லாதியா மற்றும் ராஜ்மத் மட்டன் சிக்கன் ஸ்டாலிகளில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சதீஷ் தலைமையில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது குளிர்சாதன பெட்டியில் விற்பனைக்காக வைத்திருந்த கெட்டு போன பழைய 600 கிலோ ஆட்டுக்கால்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் இவற்றில் பாக்டீரியா இருப்பது ஆய்வுகளின் முடிவுகளில் தெரியவந்ததை அடுத்து மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து அவை அழிக்கப்பட்டு கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.
இதுகுறித்து விளக்கமளிக்க சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ் குமார் கூறியிருப்பதாவது: கடந்த சில தினங்களுக்கு முன்பு எழும்பூரில் 1700 கிலோ கெட்டு போன ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அவை எங்கெல்லாம் விநியோகம் செய்யப்படுகிறது.
அந்த தகவலின் அடிப்படையில் சைதாப்பேட்டையில் கெட்டு போன ஆட்டுக்கால்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் ஆய்வு செய்தோம். அங்கு ஃப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த 600 கிலோ ஆட்டுக் கால்களை பறிமுதல் செய்து அதை ஆய்வுக்கு அனுப்பினோம்.
அந்த ஆய்வு முடிவுகள் தற்போதுதான் வந்துள்ளன. அதை பார்க்கும் போது அதிர்ச்சியாகவே இருக்கிறது. அந்த ஆட்டுக்கால்களில் ஸ்டெரெப்ட்டோ காகஸ், ஈகோலை உள்ளிட்ட பாக்டீரியாக்கள் இருந்ததாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. மேலும் அவற்றில் பெரும்பாலான ஆட்டுக்கால்கள் பூஞ்சை பிடித்து போய்தான் இருந்தது.
இந்த கடைகளில் இருந்து சிறிய கடைகளுக்கு மட்டுமில்லை ஸ்டார் ஹோட்டல்களுக்கும் இந்த இறைச்சிகள் சப்ளை செய்யப்படுகிறதாம். அது போல் டெல்லி, கன்னியாகுமரி போந்ற பகுதிகளுக்கும் இவை அனுப்பி வைக்கப்படுகின்றன. வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக கொண்டு வரப்படும் இறைச்சிகள்தான் இவை.
ஆனால் இந்த இறைச்சிகளை எங்கு எப்போது வாங்கியது என்பதற்கான எந்த ரசீதும் இல்லை. சிறிய கடைகளில் இருந்து பெரிய கடைகள் வரை இங்கிருந்துதான் இறைச்சி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்டுக்கால்கள் குறைந்தபட்சம் ஒரு மாதமாக பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. அது போல் குளிர் சாதன பெட்டிகளும் முறையான பராமரிப்பு இன்றி உடைந்து காணப்படுகிறது.
பழுதான பெட்டிகளும் இருந்தன. அதற்குள் இவை அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் எளிதில் கெட்டு போயிருக்கும். உப்புக் கண்டம் போட்டு வைத்திருக்கும் ஆட்டுக்கால்களை சுகாதாரமான முறையில் இருந்தால் வாங்கி உண்ணலாம். ஆனால் இது போன்ற கெட்டு போன ஆட்டுக்கால்களை வாங்கி உண்பதால் உடல்நல கோளாறுகள் ஏற்படும். மேலும் இந்த கடையில் இருந்து இறைச்சிகளை வாங்கியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
ஆட்டுக்கால்களை உப்புக் கண்டம் போட முழுமையாக உலர்த்தி வைக்க வேண்டும். அதில் கொஞ்சம் ஈரப்பதம் இருந்தாலும் பூஞ்சை பிடித்துவிடும். ரசீது இல்லாமல் இறைச்சிகளை வாங்கவே கூடாது. சம்பந்தப்பட்ட கடை சீல் வைக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் வைரலான நிலையில் ஓட்டல்களிலும் சாலையோர கடைகளிலும் ஆட்டுக்கால் சூப் வாங்கி குடித்தவர்கள் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications