தனியார் ஆர்டிபிசிஆர் ஆய்வகப் பணியாளர்கள் 7 பேர் உள்பட 20 பேருக்கு கொரோனா.. சென்னையில் ஷாக்
சென்னை: சென்னையில் தனியார் ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ளும் ஆய்வகத்தில் பணிபுரியும் 7 பேருக்கும் அவர்களுடன் தொடர்புடைய 13 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த 20 பேருக்கும் பூந்தமல்லி சாலையில் உள்ள தாசபிரகாஷ் சிக்னல் அருகே உள்ள கொரோனா பரிசோதனை மையத்தில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸிற்கு ஓமிக்ரான் என பெயரிடப்பட்டது. இந்தியாவில் கால்பதிக்காமல் இருந்த நிலையில் தற்போது கடந்த 1ஆம் தேதி இந்தியாவிலும் ஓமிக்ரான் நுழைந்துவிட்டது.

ஓமிக்ரான் பாதிப்பு
இன்றைய நிலவரப்படி 200 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உள்ளது. அதில் மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் தலா 54 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உள்ளது. இந்த நிலையில் பல மாநிலங்களில் குறைந்திருந்த கொரோனா எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் ஓமிக்ரானால் 3ஆவது அலை, 4 ஆவது அலை தொடங்கிவிட்டது.

இந்தியாவில் 3ஆவது அலை
அது போல் இந்தியாவில் 3ஆவது அலை தொடங்கிவிட்டதா என சந்தேகம் எழுந்தது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. மாஸ்க், சமூக இடைவெளி, தடுப்பூசி ஆகியவைதான் கொரோனாவை ஒழிக்கும் ஆயுதம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

ஓமிக்ரான்
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்றைய தினம் 605 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 27.40 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 26.96 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
Recommended Video

சோதனை
இந்த நிலையில் ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வக ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அது போல் அந்த 7 பேருடன் தொடர்புடைய மேலும் 13 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆக மொத்தம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரியை எடுப்போரும், அதை ஆய்வகத்தில் சோதனை செய்வோரும் தலை முதல் கால் வரை முழுவதும் மூடியிருக்கும் வகையிலான உடையை அணிந்திருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியிருக்கும் போது அவர்களுக்கு எப்படி இந்த பாதிப்பு ஏற்பட்டது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications