தருமபுரியில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம்.. என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? இபிஎஸ் ஆவேசம்
சென்னை: தர்மபுரியில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயமானதாக செய்திகள் வெளியான நிலையில், மக்கள் வரிப்பணத்தில் உல்லாசப் பயணம் சென்றிருக்கும் இந்த சர்க்கஸ் அரசின் முதல்வர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் திறந்த வெளி நெல் குடோன் உள்ளது. இதில் இறக்கப்பட்ட நெல் மூட்டைகளில் பல மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்ததாகவும் இது தொடர்பாக ஆய்வு நடத்திய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக, விஜிலன்ஸ் பிரிவு, 7 ஆயிரம் மூட்டைகள் மாயமானதை கண்டுபிடித்ததுள்ளதாகவும் இன்று காலை செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், இது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டரில் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தை மட்டுமே தமிழக மக்களுக்கு பரிசளித்து வரும் இந்த விடியா திமுக ஆட்சியில், தற்போது தர்மபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7,000 டன் நெல் மாயமாகி உள்ளதாக செய்திதாள்களில் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சர்க்கரையை எறும்பு தின்றது, சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள், 7000 டன் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

மக்கள் வரிப்பணத்தில் உல்லாசப் பயணம் சென்றிருக்கும் இந்த சர்க்கஸ் அரசின் முதல்வர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு நெல் மூட்டைகள் மாயமாவதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மாயமான 7000 டன்நெல் மூட்டைகளை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications