ஆவடி அருகே விமான படை குடியிருப்பில் இரும்பு போஸ்ட் விழுந்து 7 வயது சிறுவன் பலி
சென்னை: சென்னை ஆவடி அருகே விமான படை குடியிருப்பு மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 7வயது சிறுவனின் தலை மீது இரும்பு கோல் போஸ்ட் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி முத்தாப்புதுப்பேட்டையில் விமானப் படை ஊழியர்களுக்கான குடியிருப்பு உள்ளது. அங்குள்ள மைதானத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்காக கோல்போஸ்ட் இருந்தது.

இந்த மைதானத்தில் அந்த குடியிருப்பை சேர்ந்த குழந்தைகளும் பெரும்பாலும் இங்கு விளையாடுவது வழக்கம். அந்த வகையில் 7 வயது சிறுவன் ஆத்ரிக், கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தான். அவன் கோல் கீப்பராக விளையாடியபோது கோல் போஸ்ட் ஆத்ரிக்கின் தலை மீது விழுந்தது.
இதனால் சிறுவன் மயக்கமடைந்தான். உடனே பதறிய நண்பர்கள், அவனுடைய பெற்றோரிடம் கூறினர். அவர்கள் குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் வழியிலேயே இறந்துவிட்டான் என தெரிவித்தனர்.
அந்த இரும்பு போஸ்ட் துருப்பிடித்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications