வாக்கு சதவீத உயர்வு ஆளுங்கட்சிக்கு ஆபத்தா.. 18 ஆர்.கே.நகர்கள் கண் முன் வந்து போகுதே.. !
18 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சாதகமாக இருக்குமா என தெரியவில்லை.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பொதுத்தேர்தலை விட சட்டசபை இடைத் தேர்தலில் அதிகம் வாக்குகள் விழுந்திருப்பதால் இது ஆளும் கட்சிக்கு கண்டிப்பாக நல்ல செய்தியாக இருக்க முடியாது.. ஆட்டம் காண போகுதோ என்னவோ தெரியவில்லை!
பொதுவாக எப்போது இடைத்தேர்தல் நடைபெற்றாலும், அது ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே இருக்கும். செல்வாக்கு, அரசியல் பலம் அனைத்தையும் உள்ளே இறக்கி விடுவதாலேயே ஆளும் தரப்பு வெற்றி பெற்று விடும்.
முந்தைய காலகட்டங்களில் ஆளும்தரப்புக்கு சில இடைத்தேர்தல்கள் சறுக்கல்களை தந்திருந்தாலும், ஆர்கே நகர் இடைத்தேர்தல் என்பது ஆளுங்கட்சிக்கும், முக்கிய எதிர்க்கட்சியான திமுகவுக்கும் வரலாறு காணாத தோல்வியைத் தந்துவிட்டது. அதிமுக, திமுக என்பது போய் சம்பந்தமே இல்லாத புதிய கட்சியாக அமமுக இடையில் புகுந்து வெற்றியைத் தட்டிப் பறித்து சென்றது.
முதல் இடத்தில் இருந்த விருதுநகருக்கு என்ன ஆச்சு.. 7வது இடத்துக்கு போச்சு
அதிருப்தி
இப்போதைய நிலைப்படி ஆளும் தரப்புக்கு அதாவது அதிமுகவுக்கு இந்த இடைத்தேர்தல் முடிவுகள் சாதகமாக இருக்குமா என தெரியவில்லை. ஏனென்றால், இடைத்தேர்தலில் அதிருப்தி எம்எல்ஏக்களை தவிர்த்து 9 தொகுதிகளில் அதிமுக கண்டிப்பாக ஜெயித்தே ஆக வேண்டிய நிலையில் உள்ளது.
வாக்குப்பதிவு
நேற்று 18 சட்டப்பேரவை தொகுதிகளில் 71.62 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதிலும் அரூரில் 86.96 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அரூர் பாமக பெல்ட்டில் வருகிறது. எனவே இந்த அளவுக்கு அதிக வாக்குப் பதிவு நடந்திருப்பது அதிமுகவுக்கு சாதகமாக அமையுமா அல்லது எதிராகப் போகுமா என்று தெரியவில்லை.
அமமுக-திமுக
அடுத்து திருவாரூர். கிட்டத்தட்ட திமுக, அமமுகவின் செல்வாக்கை வெளிப்படுத்தும் விதமாக இது பார்க்கப்படுகிறது. திருவாரூரை பொறுத்தவரை திமுக, அமமுகவுக்கும்தான் போட்டியே.. கருணாநிதியின் சொந்த தொகுதி என்று சொன்னாலும், தினகரனின் கட்சிக்கும் இங்கு செல்வாக்கு உள்ளது. நேற்று இந்த தொகுதியில் 77.38% ஓட்டுகள் பதிவாகி உள்ளதால், களம் உச்சக்கட்ட சூட்டில் உள்ளது தெரிகிறது. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மக்கள் திரண்டு வந்து வாக்களித்திருக்கலாம் அல்லது தினகரனின் செல்வாக்கு கணிசமாக வாக்குகளாக மாறியிருக்கலாம். பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வைத்தியநாதன்
பூந்தமல்லியில், எம்எல்ஏ பதவியை இழந்த ஏழுமலை அமமுக சார்பில் இங்கே மீண்டும் போட்டியிடுகிறார். திமுக சார்பில் கிருஷ்ணசாமியும் அதிமுக சார்பில் வைத்தியநாதனும் போட்டியிடுகிறார்கள். இவர்களுக்குள் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியாத அளவுக்கு இங்கு போட்டி இருந்தது. அதனால்தான் பூந்தமல்லி 79.14% ஓட்டு பதிவினை பெற்றிருக்கிறது. ஸோ, யாருடைய கை இங்கு ஓங்கப் போகிறது என்பது மக்கள் குத்திய குத்திலிருந்து தெரிய வரும்.
பலவீனம்
இப்படி ஒவ்வொரு தொகுதியாக பிரித்து சொல்வதைவிட, இதை இரண்டாக பிரித்து விடலாம். 18 எம்எல்ஏக்களில் திருவாரூர் , ஓசூரைத் தவிர்த்த மற்ற 16 பேரும் அதிமுகவிலிருந்து அமமுகவுக்குத் தாவியவர்கள். எனவே இந்த தொகுதியில் இவர்கள் மற்றும் இவர்களது ஆதரவு வாக்குகள் அமமுகவுக்குப் பிரியும். அதிமுகவுக்கு இங்கு நிச்சயம் பலவீனம்தான். இதை ஈடு கட்டவே வட மாவட்டங்களில் செல்வாக்குடன் உள்ள பாமகவையும், கூடுதலாக தேமுதிகவையும் வம்படியாக கூட்டணியில் சேர்த்தது அதிமுக.
கை கொடுக்கும்
இந்த இரு கூட்டணிக் கட்சிகளில் பாமக முழு வீச்சில் அதிமுகவுக்காக இறங்கி வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. எனவே பாமகவின் செல்வாக்கு அதிமுகவுக்கு நிறையவே கை கொடுக்கும் என தெரிகிறது. பாமக தொண்டர்கள் இந்த தொகுதிகளில் அந்த அளவுக்கு இறங்கி வேலை பார்த்துள்ளனர்.
வேல்முருகன்
அதற்காக திமுகவை லேசில் எடைபோட்டு, விட முடியாது. இந்த இடைத்தேர்தல்களின் வெற்றியை வைத்தான் மெஜாரிட்டி, ஆட்சி கலைப்பு என அடுத்தடுத்து பக்கா பிளானில் உள்ளது திமுக. இதற்கு கை கொடுத்து உதவுவதுபோல அமைந்தது வேல்முருகனின் வரவும், ஆதரவும்! பாமக பெல்ட்டில் உள்ள வன்னியர்களின் ஆதரவில் கொஞ்சமாவது வேல்முருகன் மூலமாக திமுகவுக்கு வந்திருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
கலகலப்பு
மொத்தத்தில் இந்த அதிகபட்ச வாக்குப்பதிவு என்பது ஆளுங்கட்சிக்கு கலக்கத்தையும், எதிர்க்கட்சிக்கு கலகலப்பையும் கொடுத்திருக்கலாம். அதேசமயம், இரு தரப்புமே இன்னும் பதட்டம் நீங்காமல்தான் மே 23ம் தேதிக்கு காத்துள்ளது என்பதுதான் உண்மை.
18 தொகுதிகளிலும் பதிவான வாக்கு சதவீத விவரம்:
1 | பூந்தமல்லி | 79.14%, |
2 | பெரம்பூர் | 61.06%, |
3 | திருப்போரூர் | 81.05%, |
4 | சோளிங்கர் | 79.63%, |
5 | குடியாத்தம் | 81.79%, |
6 | ஆம்பூர் | 76.35%, |
7 | ஓசூர் | 71.29%, |
8 | பாப்பிரெட்டிபட்டி | 83.31%, |
9 | அரூர் | 86.96%, |
10 | நிலக்கோட்டை | 85.50%, |
11 | தஞ்சாவூர் | 66.10%, |
12 | மானாமதுரை | 71.22%, |
13 | ஆண்டிப்பட்டி | 75.19%, |
14 | பெரியகுளம் | 64.89%, |
15 | சாத்தூர் | 74.45% |
16 | பரமக்குடி | 71.69%, |
17 | விளாத்திகுளம் | 78.06%. |
18 | திருவாரூர் | 77.38% |