தீயாக பரவும் கொரோனா.. தமிழகத்தில் அதீத கவனத்துடன் இருக்க வேண்டிய மாவட்டங்கள்
சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு என்பது கோயம்பேடு சந்தை மூலமே பரவி உள்ளது. எனவே ஒருவரிடம் இருந்து ஒருவர், அவரிடம் இருந்து மற்றொருவருக்கு என்று அதிவேகமாக பரவ வாய்ப்பு உள்ளதால் இந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் அதீத கவனத்துடன் இருப்பது அவசியம் ஆகும்.
உலக வல்லரசுகளை ஒன்றும் இல்லாமல் செய்து வருகிறது கொரோனா வைரஸ். சுகாதார கட்டமைப்புகள் வல்லரசு நாடுகளில் வலுவாக உள்ள நிலையில் தினமும் மக்கள் கொத்துக்கொத்தாக மரணத்தை சந்தித்து வருகிறார்கள்.
இந்த சூழலில் வளரும் நாடான இந்தியாவில் இதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது இனிமேல் தான் தெரியவரும். கிட்டத்தட்ட 70 ஆயிரத்துக்கும அதிகமானோருக்கு பாதித்துவிட்ட நிலையில் இதுவரை உயிரிழப்பு என்பது வல்லரசு நாடுகளை ஒப்பிடும் போது மிகவும் குறைவுதான். ஆனால் பாதிப்பு அதிகரிக்கும் போது உயிரிழப்பும் அதிகரிக்கும் என்பதால் எச்சரிக்கை மிகவும் அவசியம் ஆகும்.
என் சமையலையாவது நேரத்துல முடிச்சிருப்பேன்.. பிரதமர் மோடி பேச்சை கிண்டலடித்த நடிகை!
விழிப்புணர்வு இல்லை
இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத்தை தொடர்ந்து கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ள தமிழகத்தில் இதுவரை 8718 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோசமான பாதிப்புக்கு சென்னை கோயம்பேடு சந்தையில் சமூக விலகலை கடைபிடிக்காதது முக்கிய காரணம் ஆகும். அத்துடன் சமூக விலகல் குறித்து விழிப்புணர்வுடன் மக்கள் இல்லாததும் இத்தகைய மோசமான பாதிப்புக்கு காரணம் ஆகும்.
பெரும் தவறாக அமைந்தது
சமூக விலகலை கடைபிடிக்காமல் வியாபாரங்கள் நடந்து வந்த நிலையில், கோயம்பேடு சந்தை மூடப்பட்ட போது உடனடியாக அங்கிருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தி தனிமைப்படுத்தி இருந்தால் கொரோனா பரவுவது ஓரளவு தடுக்கப்பட்டிருக்கும். துரதிஷ்டவசமாக பலரும் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இதுவே கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் , அரியலூர்,. பெரம்பலூர் உள்பட பல மாவட்டங்களில் கொரோனா அதிகரிக்க காரணமாக அமைந்தது.
குவியும் நோயாளிகள்
சென்னையில் நிலைமை கவலை அளிக்கும் வகையில் உள்ளது. கொரோனா தொற்று பரவும் வேகம் மிக மிக அதிமாக உள்ளது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அறிகுறி அற்றவர்கள் வீட்டுக்கண்காணிப்பில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். மோசமாக பாதிக்கப்படுபவர்களுக்கு இங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாட்டிலேயே தமிழகததில் தான் கொரோனா பரிசோதனை அதிகமாக உள்ளது.
இனி எப்படி இருக்கும்
எனினும் தற்போதைய நிலையில் கொரோனா தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில இருந்தவர்கள் அதிகம் பேர் என்பதால் தொற்று அதிகரிப்பது தினமும் அதிகரித்து வருகிறது. மிக விரைவாக அனைவரையும் தொடர்பு தடமறிதல் முறையில் தமிழக சுகாதாரத்துறை விரைவாக கண்டுபிடித்து பரிசோதித்து வருகிறது. இதனால் பாதிப்பு அளவு அதிகமாக வெளியே தெரிகிறது. அடுத்த சில நாட்களில் அனைவரையும் கண்டுபிடித்துவிட்டால் இந்த எண்ணிக்கை படிப்படியாக குறையும் என்று நம்பலாம். அதன்பிறகு புதிதாக பரவாமல் தடுப்பது மிகவும் சவாலானதாக இருக்கும்.
வட மாவட்டங்கள்
தமிழகத்தில் சென்னையில் 4882 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் 467 பேரும், செங்கல்பட்டில் 391 பேரும், கடலூரில் 396 பேரும் அரியலூரில் 344 பேரும், விழுப்புரத்தில் 299 பேரும், காஞ்சிபுரத்தில் 156 பேரும், பெரம்பலூரில் 132 பேரும், திருவண்ணாமலையில் 105 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுளளன்ர.
மாஸ்க் போடுங்கள்
இதன்படி மேலே சொன்ன சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு என்பது கோயம்பேடு சந்தை மூலமே பரவி உள்ளது. எனவே ஒருவரிடம் இருந்து ஒருவர், அவரிடம் இருந்து மற்றொருவருக்கு என்று அதிவேகமாக பரவி வருகிறது. இந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் அதீத கவனத்துடன் இருப்பது கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க உதவும். அரசின் அறிவுறுததல்படி சமூக விலகலை கடைபிடிப்பது, மாஸ்க் அணிவது, வெளியில் சென்றுவந்தால் கைகளை சோப்பு போட்டு கழுவது உள்ளிட்டவற்றை தவறாமல் கடைபிடிப்பது நல்லது. இவை தான் கொரோனா வைரஸ் தொற்றை புதிதாக யாருக்கும் வராமல் தடுக்கும் ஒரே ஆயுதம் என்பதால் தவறாமல் செய்ய வேண்டியது அவசியம். இந்த 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களிலும் மக்கள் கொரோனா பரவாமல் தடுக்க அடுத்த சில மாதங்களுக்கு சமூக விலகலை தொடர்ந்து கடைபிடிப்பது அவசியம் ஆகும்.