ரெண்டு கன்னங்களுடன் இன்று பிறந்தநாள் கொண்டாடுறேன்.. ஐ லவ் யூ ஸ்டாலின் அங்கிள்! டானியா உருக்கம்
சென்னை: முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு பின்னர் முதல்வர் ஸ்டாலின் செய்த உதவியால் இன்று தான் இரு கன்னங்களுடன் பிறந்த நாளை கொண்டாடுகிறேன் என ஆவடியை சேர்ந்த டானியா உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
சென்னை ஆவடியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ்- சவுபாக்கியா தம்பதியின் மூத்த மகள் டானியா. இவருக்கு 9 வயதாகிறது. கடந்த 6 ஆண்டுகளாக அரிய வகை முகச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தார்.

மூன்றரை வயதுக்கு பிறகு அவரது முகத்தில் வந்த ஒரு கட்டி அவரது வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டது. பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு அவருக்கு முகச்சிதைவு நோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாளுக்கு நாளுக்கு டானியாவின் முகம் ஒரு பக்கம் சிதையத் தொடங்கியது.
சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய அவரது பெற்றோருக்கு போதுமான பணவசதி இல்லை. இந்த நிலையில்தான் சிறுமி டானியா ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் தனது சிகிச்சை உதவ வேண்டும் என்றும் தான் பள்ளிக்கு சென்றாலும் அங்கு ஆசிரியர் தன்னை தனியாக உட்கார வைப்பதாகவும் குழந்தைகள் யாரும் தன்னுடன் விளையாட வருவதில்லை என்றும் அதனால் தான் பள்ளி செல்வதையே நிறுத்திவிட்டதாகவும் டானியா வீடியோவில் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோவில் முதல்வர் தனது அறுவை சிகிச்சைக்கு உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து சிறுமிக்கு தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும் என அப்போது அமைச்சராக இருந்த ஆவடி எஸ்.எம்.நாசருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஒரு முறை சிறுமியின் வீட்டுக்கு நேரில் வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்த நிலையில் தமிழக முதல்வரின் உத்தரவுக்கேற்ப சவிதா மருத்துவமனையில் சிறுமிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட டானியாவை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பிறகு மருத்துவர்களிடமும் பேசினார்.
இந்த நிலையில் 25 நாட்களுக்கு பிறகு செப்டம்பர் 12 ஆம் தேதி டிஸ்சார்ஜ் ஆன டானியா கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிறுமிக்கு முதல்வர் ஸ்டாலின் போன் மூலம் நலம் விசாரித்ததும் அவரது தாயாரிடம் தைரியம் கூறினார். 4 ஆம் வகுப்பை இல்லம் தேடி கல்வி மூலம் படித்திருந்தார் டானியா.
முழுவதும் குணமான டானியா இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு சேர்ந்தார். இந்த நிலையில் அவருக்கு இன்றைய தினம் பிறந்தநாள். இதற்காக டானியா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நான் இன்று இரு கன்னங்களுடன் பிறந்தநாள் கொண்டாடுகிறேன். அதற்கு உதவிய முதல்வருக்கு நன்றி.
அது போல் நாசர் அங்கிள், சுதர்சன் அங்கிளுக்கும், நியூஸ் சேனல்களுக்கும் நன்றி கூறிய டானியா தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் பெயரையும் தனக்கு உதவி செய்தவர்களின் பெயரையும் கூறி நன்றி தெரிவித்தார். மேலும் எனக்காக பிரார்த்தனை செய்த நபர்களுக்கும் நன்றி. ஐ லவ் யூ ஸ்டாலின் அங்கிள் என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications