சென்னையில் ஓடும் வெள்ளம்.. பங்கிங்காம் கால்வாயில் இழுத்து செல்லப்பபட்ட இளைஞர்! மீட்புபணி தீவிரம்
சென்னை: சென்னையில் மாதாவரம் கொசப்பூர் பகுதியில் பங்கிங்காம் கால்வாயில் விழுந்த 19 வயது இளைஞர் மாயமாகியுள்ளார். அவரை தீயணைப்புத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னையை பொறுத்த அளவில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் 7 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழை நீர் புகுந்தது. மழை நின்ற பின்னர் நீர் வடிந்துவிடும் என்று சொல்லப்பட்டாலும், சில இடங்களில் இன்னும் மழை நீர் வடியவில்லை. குறிப்பாக வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி, மடிப்பாக்கம் மகாலட்சுமி நகர், கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்க பாதையில் மழைநீர் அப்படியே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக இந்த சுரங்கப்பாதையில் இரண்டாவது நாளாக போக்குவரத்து முடங்கியுள்ளது.

இது தவிர கோடம்பாக்கம் அஜீஸ் நகர், சுப்பிரமணிய நகர், கார்பரேசன் காலனி சாலை ஆகிய இடங்களில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. எனவே இந்த பகுதியில் செல்வோர் சாலையில் இருக்கும் பள்ளங்களை அடையாளம் காண முடியாமல் விபத்தில் சிக்குகின்றனர். ஏற்கெனவே மேற்கு மாம்பலம் ஏரிக்கரை சாலையிலும், தியாகராய நகரிலும் மின்சாரம் தாக்கியதில் இருவர் பலியாகிய சம்பவம் தேங்கியுள்ள மழை நீர் குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.
மறுபுறம் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளதால் அதிலிருந்து உபநீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாகவும், உபரி நீர் திறக்கப்படுவதாலும் சென்னையின் அனைத்து கால்வாய்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இப்படி இருக்கையில் மாதாவரம் கொசப்பூர் பகுதியில் பங்கிங்காம் கால்வாயில் 19 வயது இளைஞர் ஒருவர் தவறி விழுந்திருக்கிறார். அவரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
நண்பர்களுடன் அமர்ந்திருந்த சந்தோஷ், கால்வாய் தண்ணீரில் கால் வைத்ததும் வழுக்கி விழுந்து அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். அவரை மீட்க நண்பர்கள் முயன்றுள்ளனர், ஆனால் முடியவில்லை. எனவே உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். இதனையடுத்து 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சந்தோஷை தேடி வருகின்றனர்.
ஏற்கெனவே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரில் கார் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் நல்வாய்ப்பாக காரிலிருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications