நடிகர் ரஜினிகாந்துடன் ஏ.சி.சண்முகம் சந்திப்பு... அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக தகவல்
சென்னை: நடிகர் ரஜினிகாந்தை புதிய நீதிக்கட்சி தலைவரும், வேலூரில் அதிமுக சின்னத்தில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவருமான ஏ.சி.சண்முகம் சந்தித்து பேசினார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லதுக்கு சென்ற ஏ.சி.சண்முகம் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து, அவருடன் கலந்தாலோசித்ததாக கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ள நிலையில், அது பற்றியும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், நேற்று ரஜினி காந்தை சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வேலூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் களமிறக்கப்பட்டனர்.
ஆனால், பணபட்டுவாடா புகாரைத் தொடர்ந்து, அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிந்து 2 மாதம் கழித்து தான் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்காக காத்திருக்கும் ரஜினிகாந்த், தற்போது, தர்பார் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.
இதற்கிடையே, மும்பையில் இருந்து திரும்பிய நடிகர் ரஜினிகாந்தை, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் சந்தித்து பேசியுள்ளார். கமல்ஹாசனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர், ஆனால், அரசியல் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வரும், ரஜினிகாந்த் எதுவும் கூறாமல் அமைதி காத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications