மகாவிஷ்ணு பேசிய பேச்சு! உணவு இடைவேளைக்கு வெளியே போகக் கூடாது! ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி!
சென்னை: சென்னை அசோக் நகர் பெண்கள் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் ஆன்மீக சொற்பொழிவாற்றிய மகாவிஷ்ணு என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் மதிய உணவுக்காக வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது என தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளி வளாகத்துக்குள் வெளியாட்களை அனுமதிக்கக்கூடாது. அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர், மாணவர்களிடம் நேரடியாக பேச அனுமதிக்கக்கூடாது

முதன்மை கல்வி அதிகாரி அனுமதி இல்லாமல், கல்வி சாரா நிகழ்ச்சியையோ, விழாவையோ பள்ளியில் நடத்தக்கூடாது.
தேசிய சுகாதார இயக்கக மருத்துவ குழுவினரை தவிர, மற்ற குழுவினரை மாணவர்களை மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்கக் கூடாது.
முதன்மை கல்வி அதிகாரி அனுமதி இல்லாமல், போட்டிகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு, மாணவர்களை வெளியில் அழைத்துச் செல்லக்கூடாது. வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்படுகிறது.
அரசு ஊதியம் பெறும் தற்காலிக ஆசிரியர்கள் உள்ளிட்டோரை தவிர, மற்றவர்களை பாடங்கள் நடத்த அனுமதித்தால், தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மதிய உணவுக்காக ஆசிரியர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கக்கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களிடம் எதிர்மறையாகவோ, இரட்டை அர்த்தத்திலோ, தொலைபேசியிலோ பேசக்கூடாது. மாணவர்கள் வருகை தொடர்பாக, பெற்றோரிடம் மட்டுமே பேச வேண்டும்
விடுமுறை நாட்களில், பள்ளியில் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி இல்லை. முதன்மை கல்வி அலுவலர் அதிகாரி மட்டுமே, அரசு நிகழ்ச்சியை அனுமதிக்கலாம். இவ்வாறு, தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை அசோக் நகர் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளஸ் 2 மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது பரம்பொருள் அறக்கட்டளையை சேர்ந்த ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு வரவழைக்கப்பட்டார்.
இவர் தானே கடவுள் என கூறிக் கொண்டு பல்வேறு ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவர் உள்நாடு, வெளிநாடுகளிலும் அந்த நிகழ்ச்சிகளை நடத்துகிறார். அந்த பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு பேசுகையில் போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்தான் இந்த ஜென்மத்தில் ஏழைகளாகவும் மாற்றுத்திறனாளிகளாகவும் கருப்பாகவும் பிறக்கிறார்கள் என சிறிதும் மனசாட்சியே இல்லாமல் மாற்றுத்திறனாளிகளின் மனம் புண்படுமே என்றும் யோசிக்காமல் மூடநம்பிக்கை கருத்தை மாணவர்களிடம் திணிக்க முயற்சித்தார்.
அப்போது இதை அங்கிருந்த கண் பார்வையற்ற ஆசிரியர் சங்கர் தட்டி கேட்டார். அவரையும் "நீங்கள் முதன்மை கல்வி அலுவலரை விட அறிவானரா" என கேட்டு மிகவும் அசிங்கப்படுத்தி பேசினார். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்த அவர் நான் எங்கும் ஓடி ஒளியவில்லை என பேசினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை செப்டம்பர் 20-ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், சித்தர் சொன்னதால்தான் பேசினேன். சித்தர்கள் என்னிடம் பேசுவார்கள், அவர்களே என்னை வழிநடத்துவார்ள். பள்ளியில் நான் ஏதும் தவறாக பேசவில்லை. எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. மாணவிகளை நல்வழிப்படுத்தும் விதமாகவே பேசினேன். பல இடங்களில் இது போல் பேசியுள்ளேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications