புகழாரம் பாடிய உறுப்பினர்கள்! விஷயத்துக்கு வரச்சொன்ன சபாநாயகர்! சட்டசபை சுவாரஸ்ய நிகழ்வுகள் சில!
சென்னை: ஆளுங்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும் சரி பாரபட்சமின்றி சபாநாயகருக்கே உரிய தனது அதிகாரத்தை முழுமையாக செலுத்தி, நேர நிர்வாகத்தை சட்டப்பேரவையில் முழுமையாக கடைபிடித்து வருகிறார் சபாநாயகர் அப்பாவு.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் 5-ம் நாள் கூட்டம் நடைபெற்ற இன்று சட்டப்பேரவை பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நடந்தன.
அதில் சிலவற்றை மட்டும் தொகுத்து இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு;

சலசலப்பு
*சபை தொடங்கியதும் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு பேச வாய்ப்பு தரும் விவகாரத்தில் லேசான சலசலப்பு ஏற்பட்டது.
*சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மூர்த்தி, ''முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்'' என்பதை மீண்டும் மீண்டும் தனது அனைத்து பதில்களிலும் குறிப்பிட்டார்.

அடக்கி வாசிக்கிறோம்
*'சட்டப்பேரவையில் கேள்வி நேரம் என்பதால் அடக்கி வாசிக்கிறோம்' -அதிமுக எம்.எல்.ஏ. அர்ஜூனன் பேச்சால் கோபமடைந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்
*கேள்வி நேரத்தின் போது எழுந்த அதிமுக எம்.எல்.ஏ. அர்ஜூனன் எஸ்.பி.வேலுமணியை புகழ்ந்து பேசியதால் சபாநாயகர் அப்பாவு அதற்கு மறுத்தார் -துரைமுருகன் குறுக்கிட்டு எல்லோரும் தலைமையை புகழ்வார்கள், இவர் அவரது கட்சியின் கொறாடாவை புகழ்கிறார், பாவம் அவருக்கு அனுமதி கொடுங்கள் என கிண்டல் செய்தார்.

உணர்ச்சிவசம்
* சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய பெரியகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், உதயநிதி ஸ்டாலினை 'இளைய கலைஞர்', 'இளைய சூரியன்' எனக் குறிப்பிட்டு புகழாரம் சூடினார்.
*திரு.வி.க.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி முதலமைச்சரை புகழ்ந்து பேசிய நிலையில், ''கேள்வியை மட்டும் கேளுங்க கவி, நான் சொல்வதை புரிஞ்சுகங்க, உங்களுக்கு அமைச்சரிடம் என்ன பதில் வேணுமோ அதை மட்டும் கேளுங்க'' என்று சபாநாயகர் அப்பாவு கறார் காட்டினார். மேலும், தாயகம் கவி பேசிக்கொண்டிருக்கும் போது, சைகையிலும் போதும் போதும் என்பதை தொடர்ந்து வெளிப்படுத்தினார் அப்பாவு.

அமைச்சர்கள் பதில்
* திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் இதுவரை 36 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 50,000-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்துள்ளோம் - சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வீ.கணேசன் தகவல்.
*தமிழகத்தின் 2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் (ஐடி பார்க்) அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது -சட்டப்பேரவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

அமைச்சர் பதற்றம்
*கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கோவிந்தராஜன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பதற்றத்துடன் காணப்பட்டார்.
*அமைச்சர் மதிவேந்தன் பதிலளிப்பதற்கு ஏதுவாக அவருக்கு சபாநாயகர் அப்பாவு பாயிண்ட்களை எடுத்துக்கொடுத்தார்.

பேப்பரில் எழுதி வைத்து
* பேரவையில் நாலாயிர திவ்ய பிரபந்தம் பற்றி பெருமிதம் தெரிவித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், விசிக எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வன் கோரிக்கையை உரிய அமைச்சர் நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
* திமுக சட்டமன்ற உறுப்பினர் அமுலு கேள்வி நேரத்தின் போது பேப்பரில் எழுதி வைத்திருந்ததை படிக்கவே பதற்றத்தில் மிகவும் சிரமப்பட்டார்.












Click it and Unblock the Notifications