நான் காலணியை துடைக்கிறேன்.. நிதி தாருங்கள்.. ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி திரட்டும் பேராசிரியர்
சென்னை: ஆதரவற்ற ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் உணவுக்காக சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பொதுமக்களின் காலணிகளை சுத்தம் செய்து நிதி திரட்டி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

உதவி கேட்காதவர்
இந்த பள்ளியில் 217 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதில் 80 மாணவர்களுக்கு மதிய உணவுடன் கல்வியும் வழங்கி வருகிறார். அந்தக் குழந்தைகளின் கல்வி, உணவு செலவுக்காக யாரிடமும் உதவி கேட்காதவர் செல்வக்குமார்.

பல்வேறு ஊர்களுக்கு
இவர் வாரந்தோறும் பல்வேறு ஊர்களுக்கு சென்று பொது இடங்களில் அமர்ந்து கொண்டு பொதுமக்களின் காலணிகளை சுத்தம் செய்தும் ஷூக்களுக்கு பாலிஷ் போட்டும் நிதி திரட்டி வருகிறார்.

புதுவை தட்டாஞ்சாவடி பகுதி
அந்த வகையில் நேற்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் பொதுமக்களின் காலணியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இதற்காக மக்கள் விரும்பி கொடுக்கும் பணத்தை பெற்று ஆதரவற்ற குழந்தைகளுக்கு செலவிட்டு வருகிறார். மேலும், தான் எழுதியுள்ள 59 புத்தகங்களை விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தையும் மாணவர்களுக்கு செலவிடுகிறார்.

காலணிகள்
செல்வக்குமாரின் நல்ல உள்ளத்தை பாராட்டி ஏராளமானோர் அவரிடம் காலணிகளை சுத்தம் செய்து கொண்டு நிதியை வழங்கி வருகிறார்கள். எந்த தொழில் செய்தாலும் அவமானம் என சிலர் கருதும் மத்தியில் யாரிடமும் நிதிக்காக கையேந்தாமல் தன்னுடைய உழைப்பின் மூலம் நிதியை பெறும் இவரது பணியை எல்லாரும் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications