தாம்பரம் நோக்கி சென்ற ஓடும் ரயிலில் ஏற முயன்ற கல்லூரி மாணவர்.. 2 கால்களும் துண்டாகி.. பெரும் சோகம்
சென்னை: தாம்பரம் நோக்கி சென்ற ஓடும் ரயிலில் ஏற முயன்ற கல்லூரி மாணவர் ரயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கியதால் படுகாயம் அடைந்தார். கல்லூரி மாணவரின் 2 கால்களும் துண்டாகி போனது.
ஒரு நிமிடம் வேகமாக வந்திருந்தால், அல்லது ஒரு நிமிடம் தாமதமாக வந்திருந்தால் பல விபத்துக்கள் நடந்திருக்காது. கவனக்குறைவு அல்லது பதற்றம் காரணமாக பலரது வாழ்க்கையில் நிரந்தமான முடக்கம் அல்லது மரணம் வரை ஏற்படுகிறது. குறிப்பாக இளம் வயதினர் தான் இதுபோன்ற மோசமான விபத்துக்களை சந்திக்கிறார்கள்.

கல்லூரி மாணவர் ஒருவர் தாம்பரத்திற்கு செல்லும் ரயிலை எப்படியாவது பிடித்து ஏறி போய்விட வேண்டும் என்று எண்ணி வேகமாக வந்திருக்கிறார். துரதிஷ்டவசமாக ரயில் புறப்பட்டு விட்டது. அப்படியும் விடாமல் ரயிலில் ஓடிப்போய் ஏறியவருக்கு இரண்டு கால்களும் துண்டாகி போய் உள்ளது. அவர் எந்த ஊர், எப்படி இந்த விபத்து நடந்தது என்பதை பார்ப்போம்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பன்னீர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி என்பவருடைய மகன் நேதாஜி. இவருக்கு 20 வயது ஆகிறது. மாணவர் நேதாஜி பொத்தேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இதனால் நேதாஜி தினமும் கல்லூரிக்கு மதுராந்தகத்தில் இருந்து ரயலில் சென்று வருகிறார்.
வழக்கம்போல வெள்ளிக்கிழமை காலை மதுராந்தகம் ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி விழுப்புரம் பயணிகள் சென்று கொண்டிருந்தது. அப்போது நேதாஜி வரும் முன்பாக ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் நோதாஜி ஓடிச்சென்று ரயிலில் ஏற முயன்றிருக்கிறார்.
அப்போது ரயில் வேகமாக சென்று கொண்டிருந்ததால், மாணவர் நேதாஜியின் கைப்பிடி நழுவி விட்டது. இதனால் அவர் ரயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையில் தண்டவாளம் பகுதியில் விழுந்துவிட்டார். ரயில் சக்கரத்தில் அவர் கால் சிக்கியது. இதில் நேதாஜியின் 2 கால்களும் முற்றுிலுமாக நசுங்கி துண்டாகியது.
இதை கண்டு அங்கிருந்த பயணிகள் கூச்சலிட்டனர். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நேதாஜியை மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவர் நேதாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி செங்கல்பட்டு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications