10 கோடிப்பே..ஏர்போர்ட் கூரைய பிச்சுகிட்டு கொடுத்த தெய்வம்! வரவேற்க சென்ற டாக்டருக்கு வந்த அதிர்ஷ்டம்
சென்னை : திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உறவினரை வரவேற்க சென்றபோது விசு பண்டிகையை ஒட்டி வெளியிடப்பட்ட கேரளா லாட்டரி சீட்டு வாங்கிய கன்னியாகுமரியைச் சேர்ந்த மருத்துவருக்கு 10 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்துள்ளது.
தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளுக்கு அதிமுக ஆட்சிக் காலத்தின் போது தடைவிதிக்கப்பட்டது சிலர் தங்கள் ஊழியத்தை பெரும்பாலும் லாட்டரி சீட்டுக்கு செலவிட்டு வருவதாக எழுந்த புகாரை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஆனாலும் தமிழகத்தில் தற்போது மறைமுகமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. லாட்டரி மூணு நம்பர் லாட்டரி உள்ளிட்ட பெயர்களில் விற்கப்படும் இந்த லாட்டரி டிக்கெட் சட்டவிரோதமாக விற்கப்படுவதும், அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து லாட்டரி சீட்டுகளை விற்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் நடந்து வருகிறது.

கேரள லாட்டரி சீட்டுகள்
ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அனுமதி உள்ளது. தனியார் நிறுவனங்கள் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுவது போலவே கேரள அரசு சார்பிலும் லாட்டரி சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் விசு பண்டிகையை ஒட்டி கேரள அரசு 10கோடி ரூபாய் பரிசு தொகை கொண்ட பம்பர் லாட்டரி சீட்டு விற்பனையை தொடங்கியது. இதேபோல் புத்தாண்டு, தீபாவளிக்கும் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறும்.

விசு பண்டிகை
இந்த டிக்கெட் ஒன்றின் விலை ரூ. 250. மொத்தம் 43 லட்சத்து 86 ஆயிரம் டிக்கெட் அச்சடிக்கப்பட்டிருந்தது. மே மாதம் 22ம் தேதி நடைபெற்ற குலுக்கலில் திருவனந்தபுரத்தில் விற்பனை செய்யப்பட்ட HB 727990 என்ற எண்கொண்ட டிக்கெட்டிற்கு முதல் பரிசு என்று அறிவிக்கப்பட்டது. திருவனந்தபுரம் பழவங்காடி பகுதியில் உள்ள சைதன்யா லக்கி சென்டர் என்ற நிறுவனம் இந்த டிக்கெட்டை விற்பனை செய்திருந்தது.

கன்னியாகுமரி மருத்துவர்
ஆனால் வெற்றியாளர் யார் என இதுவரை தெரியாமலை இருந்தது. இந்தநிலையில் அந்த லாட்டரி சீட்டிற்கு சொந்தகாரர்களாக குமரி மாவட்டம் முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வரும் டாக்டர் எம்.பிரதீப் குமார், உறவினர் என்.ரமேஷ் என்பதும், இவர்கள் மணவாளக்குறிச்சியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. உறவினரை வெளிநாடு அனுப்பி வைக்க கடந்த 15ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையம் சென்று வந்த நிலையில் இவர்கள் இந்த டிக்கெட்டை வாங்கியுள்ளார்கள்.

10 கோடி பரிசு
இந்நிலையில் தான் அவர்களுக்கு பரிசு விழுந்துள்ளது. பரிசுத்தொகை ரூ.10 கோடியில் வரித்தொகை கழித்து ரூ.6 கோடியே 16 லட்சம் இவர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பரிசு விழுந்தது குறித்து பேசிய பிரதீப் குமார், வழக்கமாக லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உண்டு. சிறிய அளவில் பரிசுகள் விழுவதும் உண்டு. ஆனால் இதுபோன்று பெரிய அளவில் பரிசுத்தொகை விழுந்தது இல்லை. சிறிது கடன்கள் உள்ளன. அவற்றை அடைக்க வேண்டும். கடவுளுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications