பஹ்ரைன் டூ சென்னை வந்த விமானம்.. நடுவானில் துடித்த கரூர் பெண்.. இருக்கையிலேயே நடந்த சோகம்
சென்னை: பஹ்ரைனில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணித்த பெண் பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. விமான பணிப்பெண்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். எனினும் இருக்கையில் சாய்ந்த நிலையிலேயே கடும் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.
பஹ்ரைனில் இருந்து 167 பயணிகளுடன் விமானம் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த 41 வயதாகும் அப்ரின் பர்வீன் என்ற பெண் பயணி பஹ்ரைனில் இருந்து பயணித்து வந்தார்.

இந்த நிலையில் சென்னையை அதிகாலையில் விமானம் நெருங்கிவிட்ட நிலையில், தரையிறங்குவதற்கு ஆயத்தமாகி கொண்டிருந்தது. அப்போது நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, பெண் பயணி அப்ரின் பர்வீனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. உடனே அவருக்கு விமான பணிப்பெண்கள் ஓடிவந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
மேலும் இது குறித்து விமானிக்கு அவசரமாக தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட விமானி, விமானம் தரை இறங்கவும், சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவை தயாராக இருக்கவும் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து விமானம் சென்னையில் தரை இறங்க வேண்டிய நேரத்தை விட 17 நிமிடங்கள் முன்னதாக தரையிறங்கியது. விமானம் தரையிறங்கிய அடுத்த நொடி, விமான நிலைய மருத்துவக் குழுவினர் விமானத்துக்குள் விறுவிறுவென ஏறி, பெண் பயணியை பரிசோதித்தார்கள்.
ஆனால் அப்ரின் பர்வீன் இருக்கையில் சாய்ந்த நிலையிலேயே கடும் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தார்கள். இது குறித்து தகவல் அறிந்த சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த அப்ரின் பர்வீன் ஒரு குழுவாக புனித உம்ரா பயணத்திற்கு சென்றுள்ளார். பயணம் முடித்து விட்டு திரும்பும் வழியில் விமானத்திலேயே உயிரிழந்திருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே பஹ்ரைனிலிருந்து அதிகாலை 3.20 மணிக்கு சென்னைக்கு வரும் இந்த விமானம் மீண்டும் அதிகாலை 4.10 மணிக்கு பக்ரைனுக்கு புறப்பட்டு செல்வது வாடிக்கை. ஆனால் பயணி ஒருவர் விமானத்துக்குள் உயிர் இழந்து விட்டதால் விமானத்தை முழுமையாக சுத்தப்படுத்திய பின்னர், சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக அதிகாலை 5.40 மணிக்கு 158 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.












Click it and Unblock the Notifications