தவியாய் தவித்த மக்களுக்கு புதுத்துணி, உணவு.. கருணை உள்ளமிக்க பெண் இன்ஸ்பெக்டர்.. குவியும் பாராட்டு!
சென்னை: தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதுவும் சென்னையில் கடந்த 5 நாட்களாக மழை வெளுத்து வாங்கியது. ஒட்டுமொத்த சென்னை மக்களையும் பயமுறுத்திய பேய்மழை தற்போது கொஞ்சம் ஓய்வெடுத்துள்ளது.
கனமழை காரணமாக சென்னையின் எழும்பூர், வடபழனி, சைதாப்பேட்டை, கிண்டி என நகரின் முக்கிய இடங்களும், தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளித்தன.

தீவிர மீட்பு பணிகள்
தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் முழ்கின. மழையின் வீரியம் குறைந்ததால் வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. காவல்துறையினர், மின்வாரிய பணியாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண் இன்ஸ்பெக்டர்
கனமழையால் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து மீட்டு சமுதாய நல கூடங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கருணை உள்ளத்தோடு உதவி புரிந்திருக்கிறார் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர்.

புது துணிகள், உணவு பொருட்கள்
அதாவது வண்ணாரப்பேட்டை சட்டம்-ஒழுங்கு பெண் இன்ஸ்பெக்டர் பிரான்வின் டேனி நேரடியாக இந்த முகாம்களுக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு புது துணிகள், பாய் மற்றும் உணவு பொருட்களையும் வழங்கினார். இதேபோல் கெனால் தெரு பகுதியில் நீரின் அளவு அதிகம் உள்ளதால் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கும் புது துணிகள், பாய் மற்றும் உணவு பொருட்களை பெண் இன்ஸ்பெக்டர் பிரான்வின் டேனி வழங்கினார்.

மக்கள் பாராட்டு
கனமழையால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்த நிலையில், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய பெண் இன்ஸ்பெக்டர் பிரான்வின் டேனியை பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமின்றி, அப்பகுதி மக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள்.

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி
வெள்ளத்தில் மிதக்கும் சென்னையில் காவல் துறையினர் தங்கள் கடமைக்கும் மேலாக மிக அற்புதமாக பணி செய்து வருகின்றனர். சில காவலர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனிப்பட்ட முறையிலும் உதவிகள் செய்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு சென்னையில் கல்லறை தோட்டத்தில் மயங்கி விழுந்த இளைஞரை அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தனது தோளில் தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதிக்க உதவினார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications