"சரி அனுமதிக்கிறோம்".. எடப்பாடிக்கு உச்ச நீதிமன்றம் கிரீன் சிக்னல்.. ஓபிஎஸ்ஸுக்கு பெரிய பின்னடைவு!
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால நிவாரணம் பெறுவதற்கு மனுதாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி கொடுத்துள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
ஓ பன்னீர்செல்வத்திற்கு அடுத்தடுத்து அதிமுகவில் பின்னடைவு ஏற்பட தொடங்கி உள்ளது. ஓ பன்னீர்செல்வத்தின் படைத்தளபதி.. இடதுகையாக இருந்தவர் கோவை செல்வராஜ். ஓ பன்னீர்செல்வத்திற்காக அரசியல் மேடைகளிலும், ஊடகங்களிலும் தீவிரமாக களமாடிக்கொண்டு இருந்தார்.
இந்த நிலையில்தான் கோவை செல்வராஜ் அவரின் அணியில் இருந்து வெளியேறி உள்ளார். அதோடு மொத்தமாக அதிமுகவில் இருந்தும் வெளியேறி உள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னெடுப்பு காரணமாக இன்று திமுகவில் இணைந்து உள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அவதூறு கருத்துகளை வெளியிட நிர்மல் குமாருக்கு தடை நீட்டிப்பு- ஹைகோர்ட்
ஓ பன்னீர்செல்வம்
இது ஓ பன்னீர்செல்வத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் சம்பவம் நடைபெற்று இருக்கிறது. நேற்று உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை சில நிமிடங்கள் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு முக்கியமான வாதம் ஒன்றை வைத்தது. அதில், அதிமுகவில் விதிகளை மாற்றி, பொதுக்குழுவை கூட்டி, பதவிகளில் மாற்றம் செய்து உள்ளோம். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து உள்ளோம். ஆனால் தேர்தல் ஆணையத்தில் இந்த விதி மாற்றங்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
கோரிக்கை
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி தேர்தல் விதி மாற்றங்களை இன்னும் ஏற்றுக்கொள்ளாமல் தேர்தல் ஆணையம் உள்ளது. எனவே இந்த வழக்கிற்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். அதாவது அதிமுகவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் எதையும் தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பாக சிவி சண்முகம் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார். ஆனாலும் இந்த மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை.
தேர்தல் ஆணையம்
உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு வழக்கு விசாரணை நடப்பதை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் இந்த மாற்றங்களை அங்கீகரிக்கவில்லை. இதனால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்பது தேர்தல் ஆணையத்தில் இன்னும் பதிவாகவில்லை. இப்போது எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர்தான். அதேபோல் ஓ பன்னீர்செல்வம்தான் ஒருங்கிணைப்பாளர். அடுத்த மாதமே ஏதாவது ஒரு இடைத்தேர்தல் வந்தால் கூட கட்சியின் வேட்பாளர் தேர்வு செய்ய இரண்டு பேரும்தான் கையெழுத்து போட வேண்டும் என்ற நிலை இருக்கிறது.
மோசம்
எடப்பாடிதான் மாப்பிள்ளை.. ஆனால் அவர் போட்டு இருக்கும் சட்டை என்னுடையது என்று சொல்லும் அளவிற்கு எடப்பாடிதான் இடைக்கால பொதுச்செயலாளர்.. ஆனால் அவர் இடைக்கால பொதுச்செயலாளர் கிடையாது.. என்று சொல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே தேர்தல் ஆணையம் கட்சி விதிகளை மாற்றுவதை ஏற்றுக்கொள்ளவில்லை. உச்ச நீதிமன்ற வழக்கிற்கும், தேர்தல் ஆணைய முடிவிற்கும் தொடர்பு இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொல்ல வேண்டும். எங்களுக்கு இதில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நேற்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது.
சரி தயார்
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், இடைக்கால நிவாரணம் வழங்குவது பற்றி விசாரிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்கு நீங்கள் தனியாக மனுதாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுத்தாக்கலை உடனே செய்யுங்கள். உங்களுக்கு மனுதாக்கல் செய்ய அனுமதிக்கிறோம். அதற்கு எதிர்மனுதாரர்கள் இரண்டு நாட்களில் பதில் அளிக்க வேண்டும், என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்த மனுதாக்கல் செய்யப்பட்டபின் எடப்பாடிக்கு இடைக்கால நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதாவது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்தாலும் அதிமுக விதி மாற்றம் தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கலாம் என்று கூற வாய்ப்புகள் உள்ளன.
எதிர் தீர்ப்பு
அப்படி இடைக்கால உத்தரவு வரும் பட்சத்தில், இதுவரை எடப்பாடி எடுத்த முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவோ, நிராகரிக்கவோ வாய்ப்புகள் உள்ளன. தேர்தல் ஆணையம் இது தொடர்பாக கிடப்பில் போட்டு இருக்கும் கோப்புகளில் ஒருவித இறுதி முடிவை எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. அது எடப்பாடிக்கு சாதகமாக இருக்கலாம். எதிராகவும் கூட இருக்கலாம். ஆனால் தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தாமல் முடிவுகளை எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்போதைக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவது பற்றி விசாரிக்க தயார் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருப்பதே எடப்பாடிக்கு ஒரு குட் நியூஸ்தான்!