ஓடிக்கொண்டிருந்தபோதே.. அரசு பஸ்சில் திடீரென பரவிய தீ, அலறியடித்து ஓடிய பயணிகள்.. சென்னையில் பரபரப்பு
சென்னை: ஓடிக் கொண்டிருந்த அரசு பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டால் பயணிகள் நிலைமை என்னவாகும்.. பதறியடித்து, பஸ்சை விட்டு இறங்கி ஓட வேண்டியதுதான். அப்படி ஒரு பதற்ற சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
Recommended Video
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம்தான் இந்த பெரும் பரபரப்புக்கு காரணம்.
இன்று காலையில்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதுவும் பஸ் நிலையத்திற்கு வெகு அருகே பஸ் வந்த நிலையில், அதற்குள்ளாக இப்படி ஒரு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

திருச்சி-சென்னை பஸ்
விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்தது. அந்த பேருந்து அரும்பாக்கம் பகுதியைத் தாண்டி கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே 100 அடி சாலையில் வந்துகொண்டிருந்தபோது பேருந்தின் அடிப்புறத்திலிருந்து கரும்புகை வெளியேறியது.

எச்சரித்த மக்கள்
இதைக் கண்ட அருகே வாகனத்தில் சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகள் பேருந்து ஓட்டுநரை எச்சரித்தனர். அதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் சமயோஜிதமாக செயல்பட்டு, விரைந்து பேருந்தை சாலையின் ஓரம் நிறுத்தினார். பின்னர், பயணிகளை கீழே இறங்க அறிவுறுத்தினார்.

மளமளவென பரவிய தீ
அதனடிப்படையில் பயணிகள் அனைவரும் கீழே இறங்கிய நிலையில், இன்சின் பகுதியில் பிடித்த தீ மளமளவென பரவி பேருந்து முழுவதும் தீபிடித்து எரிந்தது. இச்சம்பவம் தொடர்பாக கோயம்பேடு, அசோக் நகர் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து தீக்கிரையானது.

தீயணைப்பு
அதனைத் தொடர்ந்து இரு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீச்சியடித்து பேருந்தில் பிடித்த தீயை அணைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முறையான பராமரிப்பின்றி பேருந்தின் இஞ்சினில் எண்ணைக் கசிவு ஏற்பட்டு அதனால் தீப்பிடித்ததா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தின் காரணமாக 100 அடி சாலையில் இன்று காலை பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.












Click it and Unblock the Notifications