தலை சுற்ற வைக்கும் மின் கட்டணம்.. திருமண மண்டப உரிமையாளர்கள் அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை
சென்னை: மண்டபங்கள் ஆண்டுக்கு சராசரியாக 40 நாட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தற்போது விதிக்கப்படும் மின் கட்டணம் மிக அதிகமாக இருப்பதனால் அதனை குறைத்து சேவை கட்டணத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். உச்ச நேர மின்கட்டண வரம்பில் இருந்து திருமண மண்டபங்களை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து கல்யாண மண்டப உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்களை பாதித்து வரும் முக்கியமான விஷயம் என்றால் அது மின் கட்டணம் ஆகும். தமிழ்நாட்டில் உச்ச நேர மின்கட்டணம் என்ற விதிமுறை இருக்கிறது. மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும் நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். முக்கியமாகத் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இப்படித்தான் கட்டணம் விதிக்கப்படுகிறது. இதில் தான் இழப்புகளை மின்வாரியம் ஈடுகட்டி வருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு நாளில் இரண்டு முறை உச்ச நேரத்தைக் கணக்கிட்டு வருகிறது. அதன்படி, காலை: 06:00 AM முதல் 10:00 AM வரை, மாலை: 06:00 PM முதல் 10:00 PM வரை உச்ச மின் கட்டணம் ஆகும். உயர் அழுத்த மின் நுகர்வோர்களான பெரிய தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்கள், தாழ் அழுத்தத் தொழிற்சாலைகளான சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு உச்ச நேரத்தை கணக்கிட்டு மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது.
அதேநேரம் வீடுகளுக்கான மின் இணைப்புகளுக்குத் தற்போது வரை உச்ச நேரக் கூடுதல் கட்டணம் கிடையாது. எதிர்காலத்தில் 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தப்பட்ட பிறகு இது அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மின் கட்டணத்தில் உச்ச நேரத்தில் இருந்து திருமண மண்டபங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று திருமணமண்டப உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து கல்யாண மண்டப உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "திருமண மண்டபங்கள் உள்ளூர் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. ஆனால், திருமண மண்டபங்களை நடத்தி வருபவர்கள் அதிக வரி உள்ளிட்டவற்றால் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறோம். எனவே, திருமண மண்டபங்களுக்கு அத்தியாவசிய வரிச்சலுகைகளை வழங்க முன்வரும் அரசியல் கட்சிக்கு வருகிற சட்டமன்ற தேர்தலில் ஆதரவளிக்க எங்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
மண்டபங்கள் ஆண்டுக்கு சராசரியாக 40 நாட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தற்போது விதிக்கப்படும் மின் கட்டணம் மிக அதிகமாக இருப்பதனால் அதனை குறைத்து சேவை கட்டணத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். உச்ச நேர மின்கட்டண வரம்பில் இருந்து திருமண மண்டபங்களை நீக்க வேண்டும். திருமண மண்டபங்களுக்கு இருந்து வரும் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது எங்களது முக்கிய கோரிக்கையாகும்.
பொருட்காட்சி, சலுகை மற்றும் தள்ளுபடி வியாபாரம், கண்காட்சி, மாநாடு, கூட்டம் போன்ற திருமணம் அல்லாத நிகழ்ச்சிகளுக்கு மண்டபங்களை வாடகைக்கு விடுவதற்கு வர்த்தக உரிமத்தில் மாற்றம் செய்ய வேண்டும். மேற்கண்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட உறுதியாக இருக்கிறோம். திருமண மண்டபங்களின் வளர்ச்சிக்கு இந்த மாற்றங்கள் இனியமையாதவை என்பதை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications