சிஏஏ சட்டமும் எதிர்ப்புகளும்.. உலக நாடுகள் இந்தியாவை உற்றுநோக்கிய நிகழ்வு.. ஒரு சிறிய ரீவைண்ட் இதோ.!
சென்னை: சி ஏ ஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது தமிழக அரசு.
நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த அண்ணா திமுக, இன்று பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்டது.
இந்நிலையில் சிஏஏ சட்டமும் எதிர்ப்புகளும் பற்றிய ஒரு சிறிய பிளாஷ்பேக்கை இப்போது பார்க்கலாம்.

சி ஏ ஏ சட்டம்
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களவையில் நிறைவேறியது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 11-ம் தேதி மாநிலங்களவையில் இந்த சட்டம் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. ஒரே நாளில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்ததால் 2019 -ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி அமலுக்கு வந்தது. இதனிடையே மத்திய அரசு கொண்டு வந்த இந்தச் சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்கள் கொந்தளித்தனர்.

உயிரிழப்புகள்
அதுமட்டுமல்லாமல் நாடுமுழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என துவங்கின. அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கிய சி ஏ ஏ எதிர்ப்பு போராட்டம் மெல்ல பரவி தலைநகர் டெல்லி, தமிழகம், கேரளா என நாடு முழுவதும் தன்னெழுச்சியாக நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 53 பேர் பலியாகியுள்ளனர். இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் 23 பேரும், அஸ்ஸாமில் 5 பேரும் உயிரிழந்தனர்.

தடியடிகள்
இது போராட்டக்களத்தை மேலும் தீவிரப்படுத்தியதால், டெல்லி ஷாகின்பாக்கில் 2019 டிசம்பர் 14-ம் தேதி தொடங்கிய சி ஏ ஏ எதிர்ப்பு போராட்டம், மார்ச் 2020 வரை இடைவெளி இன்றி தொடர்ந்தது. இதேபோல் சென்னை வண்ணாரப்பேட்டையில் 2020 பிப்ரவரி 14-ம் தேதி தொடங்கிய சி ஏ ஏ எதிர்ப்பு போராட்டம் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வரும் வரை தொடர்ந்தது. அங்கு நிகழ்த்தப்பட்ட தடியடி தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்களை போராட்டத்திற்கு தூண்டியது. இதனால் போராட்டத்தை முடிவு கொண்டு வருவதற்குள் அப்போதைய அதிமுக அரசுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

அறிவிப்பு
கேரளா தொடங்கி பஞ்சாப், ராஜஸ்தாம், டெல்லி என பல மாநிலங்கள் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. அப்போது தமிழகத்தில் அதிமுக அரசு இருந்ததால், தமிழகத்திலும் இது போன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதனிடையே திமுக ஆட்சிக்கு வந்தவுடம் சட்டப்பேரவையில் சி ஏ ஏ எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை மெய்பிக்கும் வகையில் இன்று அதை செய்தும் காட்டிவிட்டார்.

வழக்குகள்
சி ஏ ஏ-வை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட இன்னும் சில எதிர்க்கட்சிகள் வழக்குத் தொடர்ந்துள்ளன. கேரளா, ராஜஸ்தான் மாநில அரசுகளும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. மேலும், ஐ.நா. மனித உரிமை ஆணையம் தரப்பிலும் சி.ஏ.ஏ. வழக்கில் இணைந்துகொள்ள கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் தற்போது நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications