டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் வாங்க இனி இந்த நடைமுறைதான்! தமிழக அரசு அதிரடி
சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளில் புதிய மாற்றம் அமல் செய்யப்பட்டுள்ளது. இதை மது குடிப்போர் வரவேற்றுள்ளனர். இதன் மூலம் வெளிப்படைத்தன்மை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சென்னை, கோவை உள்ளிட்ட பெரிய நகரங்களில் சோதனை முயற்சியாக இது கொண்டு வரப்படவுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மீது பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியோ அல்லது முன் கூட்டியோ மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பாட்டிலுக்கு கூடுதல் விலை கேட்டு ஊழியர்கள் தகராறு செய்வது உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன.

அது போல் கள்ளச்சந்தையிலும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மதுபானக் கடைகளில் புதிய மாற்றங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
அதாவது கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்துவதற்காக டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்கும் நடைமுறையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி மதுபானங்களை வாங்கும் நடைமுறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி கியூஆர் கோடு ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி மதுபானங்கள் வாங்கும் நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. முதற்கட்டமாக இந்த திட்டம் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் 500-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை அடிப்படையில் நவம்பர் மாதம் முதல் அமலாகிறது.
அந்த சோதனை முயற்சி வெற்றி பெறும் நிலையில் படிப்படியாக இந்த நடைமுறை தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. ஊழியர்களின் சிம் கார்டுகள், நெட்வொர்க் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு விற்பனையில் எந்த பிரச்சினையும் வராத அளவுக்கு இந்த பணபரிவர்த்தனை திட்டம் கொண்டு வரப்படும் என தெரிகிறது.
தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரம் மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூலம் தினந்தோறும் ரூ 100 கோடிக்கு வருவாய் ஈட்டப்படுகிறது. அனைத்து நாட்களிலும் திறக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடைகள், திருவள்ளுவர் தினம், சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், நபிகள் நாயகம் பிறந்தநாள், மகாவீர் ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் விடுமுற அறிவிக்கப்படுகிறது. இந்த நாட்களில் விதிகளை மீறி கடைகளை திறந்தால் காவல் துறை சார்பில் குற்றவியல் நடவடிக்கை பாயும்.
இந்தியா முழுவதும் பல்வேறு வணிகங்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பானிப்பூரி கடை, பூக்கடைகள், பெட்டிக் கடைகளில் கூட யூபிஐ மூலம் பணம் பெறும் வசதி உள்ளது. இதனால் அரசுக்கு ரூபாய் நோட்டு அடிக்கும் செலவு குறைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அந்த பணத்தை வேறு ஏதாவது நலத்திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications