எல்லாம் ஓகே.. ஆனா பாஸ்டேக் வருடாந்திர பாஸில் இப்படியொரு பிரச்சினை இருக்காம்! இது சிக்கலாச்சே
டெல்லி: நமது நாட்டில் சுங்க கட்டணம் அதிகமாக இருப்பதாகப் பலரும் புலம்பி நாம் கேட்டிருப்போம். இந்தச் சூழலில் தான் ஓராண்டு வரை பயன்படுத்தக்கூடிய மத்திய அரசு பாஸ்டேக் பாஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தாலும் கூட இதில் சில சிக்கல்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் நெடுஞ்சாலை பயணங்களுக்குச் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நெடுஞ்சாலையைக் கட்டிய பணத்தை வசூலிக்கவும் அதை பராமரிக்கும் இந்த தொகை பயன்படுகிறது. இருப்பினும், நமது நாட்டில் சுங்க கட்டணம் அதிகமாகவே இருப்பதாகப் பலரும் கூறி வந்தனர்.

பாஸ்டேக் பாஸ்
இதைக் கருத்தில் கொண்டே மத்திய அரசு பாஸ்டேக் பாஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்குப் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. மக்கள் பலரும் இந்த திட்டத்தின் மூலம் நல்ல பலன் கிடைக்கும் என்றே கூறினர். இருப்பினும், சிலர் இதில் பிரச்சினை இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார்கள். அதாவது இந்த பாஸின்படி ஓராண்டிற்கு ரூ.3000 செலுத்தினால் 200 முறை இலவசமாகச் செல்லலாம் என்பதே ரூல்ஸ்!
ஆனால், இதைத் தான் சிலர் பிரச்சினையாகவும் குறிப்பிடுகிறார்கள். அதாவது ஒரு ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குச் செல்கிறோம் என்றால் வழியில் வரும் ஒவ்வொரு டோல்கேட்டும் ஒரு பயணமாகக் கருதப்படுமாம். அதாவது நீங்கள் செல்லும் வழியில் 6 டோல்கேட் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் உங்கள் 200 இலவச டோல்கேட்டில் ஆறு குறைந்துவிடும். இப்படி கணக்கு செய்தால் 200 ஆண்டுக்கு எல்லாம் போதாது என்கிறார்கள்.
பிரச்சினை இருக்கே
பிரபல பொருளாதார வல்லுநரான ராஜேஷ் கூட இந்த பிரச்சினையை தனது ட்விட்டரில் எழுப்பியுள்ளார். அதாவது விழுப்புரம் செல்ல சென்னையில் இருந்த 6 டோல்கேட்கள் இருப்பதாகவும் அப்போது ஒரு பயணத்திற்கு 6 டிரிப்கள் முடிந்துவிடும் என குறிப்பிடுகிறார். மேலும், 200 டிரிப் இலவசம் என்பதை விட 200 முறை டோல்கேட்களில் செல்லலாம் என சொல்வதே சரியாக இருக்கும் என்கிறார்.
பலருக்கும் போதாது!
நாம் வேறு சில ரூட்களையும் கூட எடுத்துக் கொள்வோம். நீங்கள் சென்னையில் இருந்து கோவைக்குச் செல்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். சேலம் கொச்சி கன்னியாகுமரி ஹைவே வழியாக சென்றால் பரனூர், ஆத்தூர், விக்கிரவாண்டி, செங்குறிச்சி, வீரசோழபுரம், நத்தக்கரை, மேட்டுப்பட்டி, சங்கிரி வைகுண்டம், விஜயமங்கலம், செங்கப்பள்ளி என 11 சுங்கச்சாவடிகளைக் கடக்க வேண்டி இருக்கும். அப்படி பார்த்தால் ஒரு முறை சென்னை டூ கோவை போய் வந்தாலே 22 டிரிப் காலியாகும்.
நெட்டிசன்கள் கேள்வி
அதேபோல சென்னையில் இருந்து மதுரைக்கு கிராண்ட் சதன் டிரங் ரோடு வழியாக போனால் வானகரம், பரனூர், ஆத்தூர், விக்கிரவாண்டி , செங்குறிச்சி, திருமாந்துறை, சமயபுரம், பூதக்குடி, புதூர் டோல் என 9 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஒரு முறை போய் வந்தால் 18 டிரிப் காலியாகிவிடும். இப்படி ஒரு சுங்கச்சாவடிக்கு ஒரு டிரிப் என கணக்கிட்டால் மாதம் ஒரு முறை போய் வருவோருக்குக் கூட இந்த 200 டிரிப் என்பது போதாது என்றே நெட்டிசன்கள் சொல்கிறார்கள்.
மேலும், இப்போது சென்னையில் சில மால்களில் பார்க்கிங் கட்டணமும் கூட பாஸ்டேக் முறையில் வசூலிக்கப்படுகிறது. எனவே, அதற்குத் தனியாக பாஸ்டேக்கிற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றும் ராஜேஷ் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications