இந்தாங்க அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.. நுங்கம்பாக்கம் இந்திய உணவு கழக அதிகாரிகளை அதிரவைத்த சிவதாசன்
சென்னை: சென்னையில் உள்ள இந்திய உணவு கழக அலுவலகத்திற்கு கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலியான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டருடன் வேலைக்கு சேர வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவர் அஜினாஸ் சிவதாசன் வயது 25. இவர் வெள்ளிக்கிழமை மாலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்திய உணவுக் கழகத்துக்கு(fci) வந்தார்.
அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் நான் தான் இங்கு வேலைக்கு வந்திருக்கும் புது சுருக்கெழுத்தாளர் (stenographer). இந்தாங்க என்னுடைய அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் என்று கூறி ஒரு கடிதத்தை காட்டியிருக்கிறார்.

சோதனை
அத்துடன் தான் உயர் அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என்றும் அஜினாஸ் சிவதாசன் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், அவரிடம் இருந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை வாங்கி சோதித்து பார்த்தனர்.

போலீஸ் விசாரணை
அதில் அஜினாஸ் சிவதாசன் கடிதம் போலியானது என்பதை அறிந்து கொண்டனர். இதை பற்றி ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு இந்திய உணவு கழக அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் முறைப்படி அஜினாஸ் சிவதாசனை விசாரித்தனர்.

ஏமாற்றிய தரகர்
அப்போது அவர், 5 லட்சம் ரூபாய் கொடுத்து இந்த அப்பாய்ண்மெண்ட் ஆர்டரை கேரளாவைச் சேர்ந்த ஒரு இடைத்தரகரிடம் வாங்கியதாக தெரிவித்தார். அவர் கொடுத்தது உண்மையான வேலை உறுதி கடிதம் என்று நம்பி வேலையில் சேர வந்ததும் தெரியவந்தது.

போலீஸ் விசாரணை
இதையடுத்து அஜினாஸ் சிவதாசனை பிடித்து சென்ற போலீசார், அவரிடம் ஏஜெண்ட் குறித்த விசாரணைக்காக பாஸ்போர்டை வாங்கிக்கொண்டு கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். அவர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.












Click it and Unblock the Notifications