பள்ளி குழந்தைகளை வைத்து பாலியல் தொழில்..தெலுங்கானா வரை நீண்ட சென்னை நெட்வொர்க்! தட்டி தூக்கிய போலீஸ்
சென்னை : சென்னையில் ஏழை பள்ளிச் சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த புரோக்கர் கும்பலைச் சேர்ந்த ஏழு பேரை கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை காவல் துறையினர் கைது செய்த நிலையில், இவ்வழக்கில் பல மாதங்களுக்கு பிறகு தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு புரோக்கரை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். இந்த கொடூரன், சிறுமிகள் மற்றும் பெண்களை தெலங்கானா அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் தள்ளியது தெரியவந்துள்ளதாக கூறுகின்றனர் போலீசார்.
ஏழ்மையில் தத்தளித்துக் கொண்டிருந்த பள்ளி சிறுமிகளுக்கு 500, 1000 எனக் கொடுத்து அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த கும்பல், மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தும் கும்பலின் நடமாட்டம் சென்னையில் அதிகமாகவே இருந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வரும் கும்பலை கொத்துக் கொத்தாக கைது செய்தனர் சென்னை காவல்துறையினர். இது தொடர்பாக 55 மசாஜ் சென்டர்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் அனைவருமே கல்லூரி மாணவிகள் குடும்பப் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பா என்ற பெயரில் வேலைக்கு அழைத்து வரும் பெண்களுக்கு சம்பளம் தவிர்த்து கூடுதலாக பணம் வேண்டுமென்றால் வாடிக்கையாளர்களுடன் அட்ஜஸ்ட் செய்து கொண்டால் நிறைய பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியதோடு தொடர்ந்து அவர்கள் தனிமையில் இருக்கும் வீடியோவை எடுத்து அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததும் தெரிய வந்தது.
இந்த கும்பல் குறித்த விசாரணையில் இறங்கிய போது, பிரபல ரவுடி ஒருவரின் தொடர்பு இருப்பதாக சென்னை காவல்துறையினருக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று கிடைத்தது. கல்லூரி மாணவிகள் மட்டுமல்லாமல் 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளையும் இதேபோல பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததாக சென்னை குழந்தைகள் நல குழுவினர் சென்னை போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதை அடுத்து சென்னை சிசிபி போலீசார், இதுதொடர்பாக விசாரணையில் இறங்கினர். அப்போது சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்வது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு அதிரடி சோதனை நடத்தினர் சிசிபி போலீசார். அப்போது சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த 75 வயது முதியவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையில் மற்றொரு பகுதியில் வசிக்கும் பெண் புரோக்கர் ஒருவரையும் அவரது தங்கையையும் அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பணத்தாசை காட்டி அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபட்டு பல முக்கிய புள்ளிகளுக்கு இரையாக்கியது தெரிய வந்தது. கைதான பெண் புரோக்கரின் மகள் ஒருவர் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார் அவரை பாலியல் தொழிலில் தள்ளியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுமியுடன் படிக்கும் மற்ற மாணவிகளையும் தனியே வசிக்கும் பெண்களின் குழந்தைகளையும் குறிவைத்து இந்த கும்பல் பாலியல் தொழிலில் தள்ளியது தெரிய வந்தது.
இதையடுத்து பாலியல் தொழிலில் சிறுமிகளை தள்ளிய புரோக்கர்களான சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாய ஒலி, சுமதி, நதியா, தியாகராய நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன், தண்டபாணி, வளசரவாக்கத்தைச் சேர்ந்த அசோக்குமார், மறைமலைநகரை சேர்ந்த விஜயலட்சுமி, மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரமணிதரன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அந்த கும்பலிடம் சிக்கி தவித்த சிறுமிகளும் மீட்கப்பட்டனர்.
அதே நேரத்தில் மீட்கப்பட்ட காப்பகத்தில் சேர்த்து அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த நிலையில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும் தென்னிந்திய அளவில் இவர்களது நெட்வொர்க் செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பவரை கைது செய்தனர்.
சென்னையில் ஏற்கனவே பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட சிறுமிகளை பணம் கொடுத்து தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைத்து வாடிக்கையாளர்களை வரவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது,. இதனையடுத்தே தெலுங்கானா சென்ற சஞ்சய் குமார் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சஞ்சய் குமார் கைதை தொடர்ந்து இவ்வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். மேலும் கைது எண்ணிக்கை அதிகரிக்கும் என்கின்றனர் போலீசார்.












Click it and Unblock the Notifications