முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் தமிழக அரசு பள்ளிகளில் நடந்த அற்புதம்.. மாநில திட்டக்குழு தகவல்
சென்னை: முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் வருகைப்பதிவு 95 சதவீதமாக உயர்ந்திருப்பதாக மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்தார்
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம், நான் முதல்வன் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் உள்பட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அரசின் சிறப்புத் திட்டங்களை மதிப்பீடு செய்வது மற்றும் பல்வேறு கருப்பொருள்களில் ஆய்வு மேற்கொள்வது மற்றும் மாநிலத்தில் நிலவிவரும் பல்வேறு சவால்களுக்கும், வாய்ப்புகளுக்கும் தகுந்த கொள்கைகளை வடிவமைப்பது உள்ளிட்ட பணிகளை மாநில திட்டக்குழு மேற்கொண்டு வருகிறது. அந்த குழு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்தது.
மேலும் பழங்குடி சமுதாயத்தினரின் நிலை, பல்கலைக்கழகங்களின் வினாத்தாள்கள் தரம், காலநிலை மாற்றம், வனம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்களால் மக்கள் பெற்ற நன்மைகள் என்ன? என்பது பற்றி ஆய்வு செய்து தயாரிக்கப்பட்ட அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் நேற்று வழங்கினார்.
அந்த அறிக்கையில் காலை உணவுத் திட்டத்தினால் அரசு தொடக்க பள்ளி மாணவர்களிடம் ஏற்படும் தாக்கம், பயனாளி மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்களின் கல்வி மற்றும் உடல் செயல்பாடுகள் குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்கள் அந்த ஆய்வறிக்கையில் இடம் பெற்றிருக்கிறது. இதேபோல் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் காரணமாக, மக்களைத் தேடி மருந்துகள் செல்வதால் அவசர சிகிச்சைக்கென்று மருத்துவமனைகளை நாடிச் செல்லும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது,
தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் தேவையையும், நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களின் முன்னுரிமைகளுக்கேற்ப திட்டத்தை செயல்படுத்தும் வகையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு விஷயங்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
இந்த நிகழ்வுக்கு பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு அரசின் பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்து நாங்கள் கடந்த 5 மாதங்களாக ஆய்வு மேற்கொண்டோம். அதுபற்றிய 11 அறிக்கைகளை முதல்வரிம் வழங்கி உள்ளோம். அரசு பள்ளிகளில் முன்பு 60 அல்லது 70 சதவீதம் என்றிருந்த மாணவர் வருகைப்பதிவு, முதல்வரின் காலை உணவு திட்டத்தால் சாதாரணமாக 90 முதல் 95 சதவீதம் என்று உயர்ந்திருக்கிறது.
பள்ளிக் குழந்தைகள் இப்போது எல்லாம் பள்ளிக்கூடத்திற்கு போகமாட்டேன் என்று அடம்பிடிப்பதில்லை. குழந்தைகள் காலை உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள். மாணவர்கள் பள்ளிகளில் இட்லி, தோசை கேட்கிறார்கள். முந்தைய நாளில் இருந்தே தயாரிக்க வேண்டும் என்பதால் அவற்றைக் கொடுப்பதில் சிக்கல் இருக்கிறது. ஆனால் அந்த திட்டமும் அரசின் பரிசீலனையில் உள்ளது.
வாழ்வாதாரம் நிமித்தமாக பெற்றோருடன் அந்த குழந்தைகள் வேறிடத்திற்கு புலம் பெயர்ந்து போய் விடுவதன் காரணமாகவே அரசு பள்ளிகளில் 100 சதவீத வருகைப் பதிவில் 10 சதவீதம் குறைந்துள்ளது.
நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை நகராட்சிகளில் விரிவுபடுத்தி உள்ளோம். மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், கிராம மக்களுக்கு மிகப்பெரிய நன்மைகளை அளித்துள்ளன. திடீரென்று நோய்வாய்ப்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வோரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்றார்..












Click it and Unblock the Notifications