வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவருக்கு பெண் குழந்தை.. சிஏஏ நினைவாக பெயர் வைத்து அசத்தல்!
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்து வரும் போராட்டத்தில் ஈடுபட்டவரின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு சிஏஏ நினைவாக பெயர் வைத்து அசத்தியுள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து டெல்லியில் ஷாகீன்பாக், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அது போல் சென்னையின் ஷாகீன்பாக் என்று அழைக்கப்படும் வண்ணாரப்பேட்டையில் நூற்றுக்கணக்கான பெண்கள் குழந்தைகளுடன் இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்றுடன் இப்போராட்டம் 17-ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் சென்னை பாரதி நகர் குறுக்குபேட்டை பகுதியைச் சேர்ந்த சதாம் உதீன் தொடர்ச்சியாக பங்கேற்றுள்ளார். இவரது மனைவி நசீமா நேற்று ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து சதாம் உதீன் கூறுகையில், சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின் ஷாகீன்பாக் என்பதன் நினைவாக தன்னுடைய பெண் குழந்தைக்கு ஷாகீனா என பெயர் சூட்டியுள்ளோம். பிரசவத்திற்கு முன் தன் மனைவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் இருந்த போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள், தன் மனைவி, குழந்தை நலமுடன் திரும்ப ஒன்றாக தொழுகை செய்தனர்.
இந்த போராட்டத்தில் ஒரு தம்பதிக்கு திருமணமும் இந்து பெண்ணுக்கு வளைகாப்பும் நடந்தது. அதில் அந்த பெண் இஸ்லாமியர்களும் எங்கள் தொப்புள் கொடி உறவுகளே என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications