அடுத்த இன்னிங்ஸ் ரெடியா மக்களே! வங்க கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!
சென்னை: வங்க கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது; இது வரும் 18-ந் தேதி வ்லுவடையும் என எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
வடகிழக்கு பருமவழை இந்த ஆண்டு படுதீவிரமாக உள்ளது. வங்க கடலில் உருவெடுத்த காற்றழுத்த தாழ்வு நிலையானது தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெருமழையை கொட்டித் தீர்த்தது. டெல்டா மற்றும் வட தமிழக மாவட்டங்களில் கனமழை வெளுத்துவிட்டது. மயிலாடுதுறையின் சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத கனமழை பெய்திருக்கிறது. அடுத்த 4 நாட்களுக்கும் மிதமான மழை இருக்கிறதாம்.

இன்று காற்றழுத்த தாழ்வு நிலை
இப்பெருமழை லேசாக ஓய்ந்த நிலையில் வங்க கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாம். இது மெல்ல கரையை நோக்கி நகரும். வரும் 18-ந் தேதி இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடையுமாம். அதேநேரத்தில் வலுவடையும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறுமா? என்பது கண்காணிக்கப்படுகிறது என்கிறது வானிலை ஆய்வு மையம்.

சில இடங்களில் மழை
வானிலை மையத்தின் அறிவிக்கை: இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுதினம், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை நிலவரம்
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 19-ந் தேதி ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

சென்னை வானிலை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications