நடிகர் பிரசாந்த், யூடியூபர் இர்பானுக்கு பைன் போட்டதால் சென்னை போலீசுக்கு வந்த புதிய தலைவலி
சென்னை: நடிகர் பிரசாந்த், யூடியூபர் இர்பானுக்கு டிராஃபிக் விதிமீறலுக்காக சென்னை போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். அவர்களுக்கு அபராதம் விதிக்க காரணம்.. போக்குவரத்து விதிமீறலை எவ்வளவு பெரிய ஆட்கள் செய்தாலும் அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே எல்லாரும் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது தான் நோக்கம். ஆனால் அதுவே போலீசுக்கு புதிய தலைவலியாகி உள்ளது.
நடிகர் பிரசாந்த் அந்தகன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் புரொமோசனுக்காக தனியார் யூடியூப் சேனலுக்கு நடிகர் பிரசாந்த் பேட்டி அளித்தார். அவர் தியாகராயநகரில் புல்லட் மோட்டார் சைக்கிளில் ஆங்கருடன் தலைகவசம் அணியாமல் பேட்டி அளித்தபடி சென்றார். இதைபார்த்த நெட்டிசன்கள், வீடியோவில் ஹெல்மெட் போடாமல் செல்வதை சுட்டிக்காட்டி, அபராதம் விதிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்கள்.

பலரும் பிரசாந்தின் இரு சக்கர வீடியோவை சென்னை போக்குவரத்து போலீசுக்கு டேக் செய்து, சட்டம் சாமானியருக்குத்தானா என்று கேள்வி எழுப்பினார்கள். இதையடுத்து தலை கவசம் அணியாமல் ஓட்டிய பிரசாந்த், பின்னால் அமர்ந்து தலைகவசம் அணியாமல் சென்ற ஆங்கர் என இருண்டு பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் என இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத சலானை ஆன்லைனில் பகிர்ந்தனர்.
இதை பார்த்த நெட்டிசன்கள், யூடியூபர் இர்பான் தலைகவசம் அணியாமல் பைக்கில் சென்ற வீடியோவை சுட்டி அபராதம் விதிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்கள். பலரும் யூடியூபர் இர்பானை விமர்சித்தும், பிரசாந்த்தை ஆதரித்தும், போலீசுக்கு எதிராக பதிவுகளை வெளியிட்டு விமர்சிக்க தொடங்கினார்கள். அதனால் போலீசாரும், யூடியூபர் இர்பானுக்கு ஹெல்மட் அணியாமல் சென்றதற்காக ஒரு 1000 ரூபாயும், நம்பர் பிளேட் தெளிவாக இல்லாத காரணத்திற்காக ஒரு 500 என மொத்தம் 1500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதையும் ஆன்லைனில் பகிர்ந்தனர்.
நடிகர் பிரசாந்த், யூடியூபர் இர்பானை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் சென்ற வீடியோக்களை டேக் செய்து அபராதம் எப்போது விதிக்கப்படும் என்று கேள்வி எழுப்பியபடி உள்ளனர். இதேபோல் பலரது வீடியோக்கள், புகைப்படங்களை எடுத்து அபராதம் எப்போது விதிக்கப்படும் என்று கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். சில யூடியூபர்கள் வாகனத்தை ஓட்டியபடி பேசியபடி தான் வீடியோவை எடுத்து போடுகிறார்கள். அதுவுமே சட்டப்படி குற்றம் ஆகும். இதற்கும் அபராதம் விதிக்க முடியும் என்பதால், அதையும் சுட்டிக்காட்டி பல யூடியூபர்களை பற்றி நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
அடுத்தாக அமைச்சர்கள், அதிகாரிகள், பிரபலங்கள், சாமானிர்கள் என சகட்டுமேனிக்கு புகைப்படம் எடுத்து டேக் செய்து சென்னை போலீஸை நெட்டிசன்கள் டார்ச்சர் செய்ய தொடங்கி உள்ளனர். இது போலீசுக்கு புது தலைவலியாக மாறி உள்ளது. அத்தனை பேருக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக அதற்காக ஒரு டிபார்ட்மெண்டே உருவாக்க வேண்டும் என்பதுதான் உண்மை.
தமிழ்நாடு முழுவதும் தினமும் பல லட்சம் பேர் ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்கள். பல நகரங்களில் சிசிடிவி கேமராக்களை அடிப்படையாக வைத்து அபராதம் விதிக்க முடியும். ஆனால் ஒரு நாளும் போலீஸ் அப்படி செய்தது இல்லை.. மனிதாபிமான அடிப்படையிலும், நடைமுறை ரீதியாக பெரிய சிக்கலும் குழப்பமும் மக்களிடையே ஏற்படும் என்பதால், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலேயே வாகன சோதனையில் மட்டும் அபராதம் விதிக்கிறார்கள்.
அதேநேரம் சென்னையில் மிகப்பெரிய வாகன நெரிசல் உள்ள பகுதி என்பதால் விபத்து அபாயம் மிக அதிகம். எனவே சென்னையில் மட்டும் ஹெல்மட் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியாவது அணிய வைக்க போலீஸ் முயற்சிக்கிறது.. அதற்காகவே விழிப்புணர்வு அடிப்படையில் ஆன்லைனில் அபராதம் விதிக்கிறது. இதை பார்த்து நான்கு பேர் ஹெல்மெட் போடாவிட்டால் போலீஸ் பிடிப்பார்கள் என்று நினைத்து அணிவார்கள் என்பதால் போலீஸ் அபராதம் விதிக்கிறார்கள். ஆனால் நடிகர் பிரசாந்த், யூடியூபர் இர்பானுக்கு டிராஃபிக் விதிமீறலுக்காக விதித்த அபராதம் புதிய தலைவலியாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications