விளையாட்டு திறமையிருந்தும் முன்னேற முடியாமல் தவித்த இளைஞர்களே, "வந்தாச்சு ஆடுகளம்!"ஸ்டாலின் அசத்தல்
சென்னை: விளையாட்டுத்துறையில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். விரைவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செஸ் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் மெய்யநாதன் 'ஸ்போர்ட்ஸ் நாதன்' ஆகவே மாறிவிட்டார். சுறு சுறுப்பான அமைச்சர் கிடைத்ததற்கு பெருமை பட வேண்டும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவித்தார். சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் 1,130 வீரர்கள், வீராங்களைகளுக்கு காசோலைகள், விருதுகளை வழங்கினார். 2018-19-20 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிசுத் தொகையை வழங்கினார்.
விளையாட்டு வீரர்களுக்கு உள்ள சந்தேகங்களை கேட்டறிய ஆடுகளம் உதவி மையத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான சந்தேகங்களை தொலைபேசி மூலம் கேட்டறிய உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான சந்தேகங்களை கேட்டறிவதற்காக ஆடுகளம் தகவல் மையத்தை தொடங்கி வைத்தார்.

ஆடுகளம் உதவி மையம்
விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான சந்தேகங்களை தொலைபேசி மூலம் கேட்டறிய இந்த உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் கோப்பை மாநில விளையாட்டு போட்டிக்கான இணையதள பதிவையும் முதலமைச்சர் தொடக்கி வைத்துள்ளார்.

ஸ்டாலின் பேச்சு
தொடர்ந்து பேசிய அவர், "உலகமே வியந்து பார்க்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட்டை அமைச்சர் மெய்யநாதன் நடத்தி காட்டினார். அமைச்சர் மெய்யநாதன் ஸ்போர்ட்ஸ் நாயகனாகவே மாறிவிட்டார். தனது துறையை என்றும் எப்போதும் துடிப்பாகவே வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு முதன்மை பெற வேண்டும். பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கு வீரர்கள் பெருமை சேர்க்க வேண்டும்.

விளையாட்டில் மறுமலர்சி
செஸ் ஒலிம்பியாட் போட்டி நகரம் முதல் கிராமம் வரை மாணவர்கள், இளைஞர்கள் மீது விளையாட்டு மீதான ஆர்வத்தை தூண்டியது. விளையாட்டுத்துறையில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. கபடி, சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று கூறினார். செஸ் விளையாட்டு மாணவர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செஸ் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தமிழக வீரர்கள் சாதனை
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியாளர்கள், கிராண்ட் மாஸ்டர்கள் மூலம் இலவசமாக ஆன்லைனில் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான கபடி, சிலம்பாட்டத்துக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உலகளவில் விளையாட்டில் தமிழக வீரர்கள் பங்கேற்று சாதனை புரிய வேண்டும் என்பதால் இதுபோன்ற விழா நடக்கிறது.

தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் செப்டம்பர் முதல் 6 மாதங்களுக்கு பல்வேறு இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. அக்டோபரில் மாவட்ட அளவிலும், ஜனவரியில் மாநில அளவிலும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் நடைபெறும். ஊக்கத்தொகை வழங்கப்படாமல் இருந்த சாதனையாளர்கள் கண்டறியப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பை உருவாக்குகிறோம். தமிழ்நாடு அரசு வாய்ப்புகளையும் உருவாக்கி தருகிறது. சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் இன்று தொடங்க உள்ளது. தமிழக விளையாட்டுத்துறையில் புது மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

விளையாட்டு வீரர்களுக்கு கவுரவம்
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு 2018-19, 2019-20, 2020-21 -ஆம் ஆண்டுக்கான விருதுகளை வழங்கி கவுரவித்தார் . சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் 1,130 வீரர்கள், வீராங்கனைகளுக்கு காசோலைகள் மற்றும் விருதுகளை முதலமைச்சர் வழங்கினார். 2018-19-20 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விருத்தாளர்களுக்கு பரிசுத்தொகையும் வழங்கினார். சரத் கமல், சத்யன், ஜோஷ்னா சின்னப்பா மற்றும் பிரக்ஞானந்த உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றனர். விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications